Author: நாமக்கல் சிபி
•11/11/2007 10:32:00 am
பகுதி 10

அலுவலகக் கோப்பொன்றில் கையொப்பம் இட்டுக் கொண்டிருந்த தென்னரசுவின் செல்பேசி ஒலித்தது.

"ஹலோ"

"சார்! நான் எஸ் ஐ தனசேகரன்"

"சொல்லுங்க ஆட்களை ட்ரேஸ் பண்ணிட்டீங்களா?"

"ரெண்டு நாளா சிட்டி முழுக்க சர்ச் பண்ணிட்டோம் சார்! ஆனா இன்னிக்கு அவங்களா வந்து சரண்டர் ஆயிட்டாங்க!"

"குட்! எஃப்.ஐ.ஆர் போட்டுட்டு யாரு அனுப்புனாங்க என்ன ஏதுன்னு விசாரிங்க!"

"சார்.. ஆனா எஃப்.ஐ.ஆர் போடுறதுலே ஒரு சிக்கல்!.."

"யோவ். என்னய்யா சிக்கல் அதிலே! காலேஜ்க்குள்ளே புகுந்து ஒரு அப்பாவிப் பையனை அடிச்சிருக்கானுவ! நீங்களே தேடிப் பிடிச்சி ஸ்டேஷனுக்கு அள்ளிகிட்டு வந்திருக்க வேண்டாம்!, ஏன் பெரிய இடத்து ஆளுங்களா, சொல்லுங்க! எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்! முதல்ல எஃப்.ஐ.ஆர் போட்டுடு"

"சார்! வேற யாராவதா இருந்தாலும் கூட இந்நேரம் எல்லா ஃபார்மாலிட்டீசும் முடிச்சிட்டு உங்ககிட்டு சொல்லி இருப்பேன். இவங்க எல்லாரும் உங்க ஆளுங்க..! நீங்கதான் அடிக்க அனுப்பிச்சதா வேற சொல்றாங்க"

"......................"

"அதான் சார் என்ன பண்ணுறதுன்னு தெரியாம கொஞ்சம் வெயிட் பண்ணி உங்ககிட்டெ ஒரு வார்த்தை சொல்லிடலாம்ணு"

"அப்படியா சரி! அவங்களை ஸ்டேஷன்லலயே வெச்சிருங்க! தோ இன்னும் ஒரு மணி நேரத்துல நானே அங்க வரேன்"

மருத்துவமனையில் சக்தியின் கட்டிலருகே நாற்காலியில் அமர்ந்து ஆப்பிள் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி சக்தியிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

தாடைப் பகுதிகளில் வலி என்றபோதும் பெரிதான காயம் எதுவும் இல்லாததால் உண்பதற்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை சக்திக்கு!

"சக்தி! உங்க அப்பாவுக்கு தகவல் கொடுத்தாச்சு! இந்நேரம் புறப்பட்டு வந்துகிட்டிருப்பாங்க! அநேகமா சாயங்காலத்துக்குள்ளே வந்துடுவாங்க!"

"ஐயோ! கேள்விப்பட்டவுடனே துடிச்சிப் போயிருப்பாங்களே நந்தினி! யாரு எதுக்கு அடிச்சாங்கன்னே தெரியாம என்னன்னு சொல்லுறது?"

சக்தியின் முகத்தில் கவலை ரேகைள் படரத் தொடங்கியதைக் கவனித்த நந்தினி

"சக்தி! ரிலாக்ஸ் ஆ இருங்க! அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்"

என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே அவளது செல்பேசி ஒலித்தது.

தனது செல்போனை எடுத்துப் பார்த்தவள்,

"இருங்க சக்தி இதோ வந்துடறேன்.." என்று எழுந்து சென்றாள்.

"ஹலோ யார் பேசுறது?"

"நாங்க யார்ங்குறது இப்போ முக்கியம் இல்லை மேடம்! சக்தியை அடிச்சது யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சாகணும், இப்போ அதுதான் முக்கியம்"

"யாரு...யாரு அவங்க? எதுக்காக அடிச்சாங்க...? உங்களுக்குத் தெருயுமா"?

படபடவென கேள்விகளை வீசினாள் நந்தினி.

"அட! அவசரப் படாதீங்க மேடம்! பொறுமையாக் கேளுங்க! இப்போ டையத்தை வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா யானைக் கவுளி C2 போலீஸ் ஸ்டேஷன் போங்க! உங்களுக்கே எல்லாம் தெரிய வரும், அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க அங்கே போறது பத்தி உங்க அண்ணன்கிடே மூச்சு விட்டுடாதீங்க! சீக்கிரம் கிளம்புங்க! இப்ப கட் பண்ணிடறோம்"

தொடர்பு துண்டிக்கப் பட்டது. கால் ரெஜிஸ்டரில் அந்த எண்ணைப் பார்த்தாள்.
பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் நம்பராக இருந்தது.

"ஏதாச்சும் பூத்லே இருந்து பேசி இருப்பாங்க!" என்று நினனத்துக் கொண்டே புறப்பட ஆயத்தமானாள்.

யானைக் கவுளி எனப்படும் எலிபெண்ட் கேட் பகுதியின் சமீபத்தை நெருங்கியதும் மீண்டும் தொலை பேசி அழைத்தது.

"ஹலோ! ஸ்டேஷன் பக்கம் போயிட்டீங்களா! உடனே உள்ளே போகாதீங்க! ஒரு பத்து நிமிஷம் வெளியே கொஞ்சம் மறைவா வெயிட் பண்ணி ஸ்டேஷன் வாசலை கவனிங்க!"

இதனை மட்டும் சொல்லிவிட்டு தொடர்பு துண்டிக்கப் பட்டது. இந்த முறை வெறொரு தொலைபேசி எண் இருந்தது.

அதன் படியே காவல் நிலையத்திற்கு வெகு அருகே செல்லாமல் சற்று முன்பாகவே எதிர்ப்புறம் இருந்த ஒரு ஓட்டலில் நுழைந்து அதன் வாசலுக்கு உட்புறமாக நின்று காவல் நிலையத்தை கவனிக்கத் தொடங்கினாள்.

ஒரு பத்து நிமிடம் போலக் கடந்ததும் ஸ்டேஷன் உட்புறமிருந்து ஒரு வெள்ளைச் வேட்டி சட்டை யணிந்த வாட்ட சாட்டமான நபர் வருவது தெரிந்தது. பின்னாலேயே நான்கைகந்து பேர்! அட! சாட்சாத் சக்தியை அடித்த அதே அடியாட்கள்!

கேட் அருகில் நின்ற அந்த வாட்ட சாட்டமான நபர் அவர்களிடம் ஏதோ பேசி அனுப்ப அவர்கள் விருவிறுவென்று சாலைக்கு வந்து வழியில் ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிச் சென்றனர்.

ஐந்து நிமிடத்தில் காவல் நிலைய கேட் அருகே ஒரு டாட்டா சஃபாரி வந்து நிற்க அந்த வண்டியில் ஏறுவது தன் அண்ணன் எம்.எல்.ஏ தென்னரசுவேதான் என்பதை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்து கொண்டிருந்தாள் நந்தினி.

அவளது உதடுகள் துடித்தன. கை விரல் நகங்களை வேக வேகமாக கடித்துக் கொண்டிருந்தாள் அவளையும் அறியாமல்!

தொடரும்.....................!
Author: நாமக்கல் சிபி
•11/11/2007 09:46:00 am
பகுதி - 9

ஒன்றரை நாட்கள் கழித்து மெல்லக் கண் திறந்தான் சக்தி!
தான் இருப்பது ஒரு மருத்துவமனையின் சூழல் என்று மங்கலாகத் தெரிந்தது. தலை மற்றும் வலது கையில் வலியை உணர்ந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நினைவிற்கு வந்தது. லஞ்ச் பிரேக்கில் நந்தினியுடன் கேண்டீன் நோக்கிச் சென்றதும் அப்போது எதிரே நன்கைந்து பேர் ஓடி வந்ததும், தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்பதை உணர்ந்து சுதாகரிப்பதற்குள் தபதபவென தன் மீது தொடுக்கப் பட்ட தாக்குதல்களும்.
சட்டென அப்போது தன்னுடன் நந்தினியும் இருந்தது நினைவில் வந்தது.

"கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது" மனம் பதைத்தது.

மெல்ல வலது கையை உயர்த்த முயற்சித்தான். முடிய வில்லை. வலி உயிர் போய்விடும்போல் இருந்தது. யாரேனும் அருகில் இருக்கிறார்களா என்று பார்த்தான். அறை வாசலை ஒரு நர்ஸ் கடந்து போவது தெரிந்தது. குரலை உயர்த்தி அழைக்க முயன்றான். சப்தம் அதிகம் எழவில்லை.

"சிஸ்டர்" முணகலாக குரல் வெளிப்பட்டது. உதடுகளிலும் காயமடைந்திருப்பதாகத் தோன்றியது. உதடுகளும் கொஞ்சம் தடித்துப் போயிருந்தன. அப்படியே மீண்டும் மயங்கிப் போனான்.

கட்டிலருகே யாரோ வந்தது போல் தோன்ற மீண்டும் கண் விழித்தான்.
நந்தினி கட்டில் அருகே நின்றிருந்தாள்.

"நல்ல வேளை அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை போலும்.." உள்ளூர நிம்மதி அடைந்தான்.

"ந..ந..ந்தினி"

சட்டென கவனம் கலைந்த நந்தினியின் முகத்தில் புன்னகை பிறந்தது.

"சக்தி.. ஆர் யூ ஆல் ரைட்?"

அவளுக்குக் குரல் தழுதழுத்தது. சட்டென கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. இரு கரங்களாலும் முகம் பொத்தி அழத் தொடங்கினாள்.

இவனால் தொடர்ந்து பேசவும் முடியவில்லை.
"எதற்காக அழுகிறாள் என்றே தெரியவில்லை. அழுகையை எப்படி நிறுத்துவது? என்றும் புரியவில்லை".

அப்படியே கண்களை மூடிக் கொண்டான். இப்போது அவன் கண்களில் இருந்தும் ஒரு சொட்டு கன்னத்தில் வழிந்தது.


சிறிது நேரத்தில் அவளது அழுகை ஓய்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகைத்தாள்.

"சாரி சக்தி! " என்று அவனது இடது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

தொடரும்.....................!

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!