Author: நாமக்கல் சிபி
•6/27/2009 12:45:00 pm
என் பாதை எதுவாகவிருக்கும் என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை! இருப்பினும் அவள் என்னைப் பின்தொடர முயற்சிக்கக் கூடுமெனெ எண்ணியிருந்தேன்! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. அனுமதித்ததுமில்லை!

கடந்த காலங்கள் எல்லாவற்றிலும் என் முடிவுப்படியே அனைத்தும் நடந்துகொண்டிருந்தன! இதோ கடந்து சென்ற கடைசி நொடிப் பொழுதுவரை அப்படியேதான்! இந்த நொடியிலிருந்து என்னுள் என்னையும் அறியாமல் அப்படியொரு ஐயம் தோன்ன்றியிருக்கிறது! ஏன் எதனால் என்றெல்லாம் என்னால் அறுதியிட்டுக் கூறிவிடமுடியவில்லை! ஆயினும் என் உள்மனது சொல்லிக் கொண்டிருந்தது! என்னையும் மீறி என் அனுமதியின்றி நடந்துவிடுமோ என்ற உறுத்தல் எனக்குள்ளே இப்பொழுது எழுந்துவிட்டிருந்தது!

அதோ அந்த மலர்க்கொத்து அங்காடியில்தான் முதன்முதலில் அவளைச் சந்தித்திருந்தேன்!
நான் "ஹவ் மச்?" என்றபொழுது என் முகம் பார்த்துப் புன்னகைத்தாள்! "இருநூற்று ஐம்பது மட்டும்". மூன்று நூறு ரூபாய்களைக் கையிலெடுத்துக் கொடுத்தேன்! திருப்பிக் கொடுத்த ஐம்பது ரூபாயோடு மீண்டும் ஒரு புன்னகை! அவள் உதடுகள் உதிர்த்த நன்றி ஏனோ என் செவிகளுக்குள் செல்ல வில்லை போலும்!
"என்ன?" என்று ஏறிட்டு நோக்கினேன் அவளை! மீண்டும் அவள் உதடுகள் எதையோ உதிர்த்தன! சட்டென அங்கிருந்து நகர்ந்துகொண்டாள்!

அங்காடி வாயிலை அடைந்தபொழுது, அவள் என் கைகளில் இருந்தாள்! சிறிதும் கனக்கவில்லை! நான் ஏன் அவளை அள்ளி வந்தேன்? அட! அதற்குமல்லவா நன்றி சொல்கிறாள். நியாயமாக கோவித்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும்! திரும்பிப் பார்த்தேன்! இப்பொழுது அவள் அங்காடிக்குள்ளேயேதானிருந்தாள்! தன் சிநேகிதியிடம் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்! என்னைப் பற்றித்தானோ என்று நினைத்துக் கொண்டேன்!

சில நேரங்கள் எனக்குச் சிரிப்பாய்க் கூட இருந்தது! நானா இப்படி? எப்பொழுதும் அவள் முகத்தையே எண்ணிக் கொண்டிருக்கிறேன்! கல்லூரி நாட்களில் கூட எந்த ஒரு பெண்ணும் என்னுள் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கவில்லை! இப்பொழுது என்ன ஏற்பட்டது எனக்கு?

மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிட்டிவிடவில்லை எனக்கு! காரண காரியங்களை நாமேதான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையின் விளைவினூடே மீண்டும் நானங்கு சென்றபோது அவள் வேலையிலிருந்து நின்றுவிட்டிருந்தாள்! எப்படியென்று தேடுவது! பெயர் கூடத் தெரியாதே எனக்கு!

பெருமூச்சொன்றை வெளியிட்டுக் கொண்டபோது மீண்டும் என் கண் முன் தோன்றினாள். அவளது சிநேகிதியின் சிறுகுறும்பு அவள் மீதான என் ஈர்ப்பை அவளிடம் புலப்படுத்தியிருக்கிறது போலும்! என் வருகையை அவளும் எதிர்நோக்கியே இருந்து வந்திருக்கிறாள்!

பூங்கொத்து எதுவும் வாங்காத பின்னும் கூட அவளின் புன்னகை எனக்குக் கிடைத்தது!
என்னுள் எத்தனையோ பூங்கொத்துக்கள் மழையாய் விழுந்தன! இப்படியே எங்கள் சந்திப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தவண்ணம் இருந்தன! காரண காரியங்களும் தானாகவே அமைந்தன! சில என்னாலும், சில அவளாளும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவையே என்று பிரிதொரு நாளில் நாங்களிருவரும் சொல்லிச் சிரித்துக் கொண்டோம்!

மழை நின்ற பின்னாலும் சில்லென்ற தூறல்கள் விழுந்தவண்ணம் இருந்த ஒரு மழை நாளின் மாலைப் பொழுதில் என் காதலைத் தெரியப் படுத்தினேன்! அவளிடமிருந்து எந்தவொரு ஆச்சரியமோ, ஆட்சேபணையோ எழவில்லை! அவளது மௌனம் அவளுடைய இசைவுக்கான வெளிப்பாடாகப் புரிந்து கொள்ள எனக்குப் போதுமானதாக இருந்தது!

என் மீதான அவளது உரிமை அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அவள் என்னைப் பின் தொடர்வது பொன்ற பிரம்மை எனக்குள் தோன்றலாயிற்று! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. அனுமதித்ததுமில்லை!

நாங்கள் மகிழ்ந்திருந்த கணங்கள் எல்லாம் துணுக்குற்ற சில நேரங்களில் அவளது வினாக்கள் என்னைச் சிதறடிக்க முயன்றிருந்தன! ஆயினும் நான் அவற்றை வெளிக்காட்டிக் கொண்டிராதிருந்தவனாயிருந்தேன்! என் அனுமதியையும் பெறாமலேயே என்னை ஆராயத் தொடங்கியிருக்கிறாள் என்றறிந்தபோது எனக்குள் அதிர்ச்சியும், அயற்சியும் ஏற்பட்டிருந்தன!

முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அவள் என்னை ஆக்கிரமிக்கவும் தொடங்கியிருந்தாள்! என் சட்டைப் பையிலிருந்த சாக்லேட் காகிதங்களைக் கூட சந்தேகக் கண் கொண்டு என் கண்களை அவள் ஊடுறுவிப் பார்ப்பது எனக்குச் சலிப்பைத் தந்தது!

இப்பொழுதெல்லாம் எங்கள் சந்திப்புகள் அறவே நின்று போயிருந்தது! தொலைபேசிச் சிணுங்கள்களும் இருப்பதில்லை! என்னை அவளாகவே புறக்கணித்துக் கொண்டிருந்தாள்!
தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு சென்றாள்! நியாயமான காரணங்கள் அமைந்த பொழுதும் கூட எங்கள் சந்திப்பு ஏனோ நிகழவேயில்லை! அன்றொரு நாள் அவள் பூங்கொத்து அங்காடியில் வேலையாயிருப்பாள் என்ற நம்பிக்கையில் வேறொரு இடத்தில், வேறொரு அங்காடியில் சுற்றிக் கொண்டிருந்த எங்களை எதிர்பாராத தருணத்தில் அவள் சந்தித்த பின்னர்.

இப்பொழுதெல்லாம் நான் வேறொரு மலரங்காடிக்குச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தேன்!
"ஹவ் மச்" என்றேன். "முன்னூற்று முப்பது" என்றாள் அவள்! கூடவே புன்னகையும்!


[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]
Author: நாமக்கல் சிபி
•3/05/2009 09:21:00 am

பகுதி 2


தனது லேப்டாப் திரையின்மேல் கண்களை மேயவிட்டுக் கொண்டே பேசினார் ஷர்மா!

"என்ன யங்மேன்! இரவு நேரத்துல தனியா போகும்போது ஏதாச்சும் பயந்துட்டியா! ஜஸ்ட் இதெல்லாம் ஒரு பிரம்மை!"

"இல்லைங்க மிஸ்டர் ஷர்மா! ஜஸ்ட் குரல் கேட்டுது, தெளிவில்லாத வாய்ஸ் கேட்டதுன்னெல்லாம் இருந்தா பிரம்மைன்னு எடுத்துக்கலாம்! தெளிவா ஒரு செய்யுளையே சொன்னப்போ இதிலே ஏதோ ஒரு விஷயம் இருக்கணும்னுதான் நினைக்கத் தோணுது!"

"அட! அப்படியா! என்ன செய்யுள்னு உங்களுக்கு நினைவிருக்கா மிஸ்டர் நந்தா?"

"ம் நல்லா ஞாபகத்தில் இருக்கே!" என்று தன் காதில் விழுந்த சொற்களை கோர்வையாகக் கூற முடியாமல் திக்கித் திணறி சொல்லி முடித்தான்!

சற்று யோசித்த ஷர்மா

"ம்ஹூம்! நீங்க இதுவரைக்கும் ஜோதிட ஆராய்ச்சி சம்மந்தமான புத்தகங்கள் ஏதாச்சும் படிச்சிருக்கீங்களா?"

"இல்லை! படிச்சதில்லை!"

"வெரி இண்ட்ரஸ்டிங்க்! நீங்க சொன்ன செய்யுள் புலிப்பாணியார் எழுதின பாடல்களிலே ஒண்ணு! ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் 3,7,5,11 வது இடங்களில் தனித்து இருந்தால் ஜாதகன் மாய மந்திரங்கள் அல்லது வைத்தியக் கலைகளில் தேர்ச்சி பெறுவான் என்று பொருள்! ஆனா இதை எதுக்கு உங்க காதுல வந்து சொல்லணும்!"

"வைத்தியக் கலைன்னு சொன்னது ஓரளவு பொருந்தி வருது! நாம பண்ணுறதே மூலிகைகள் தொடர்பான ஆராய்ச்சிதான்! ஆனா மந்திரங்கள் எல்லாம் எதுக்காக கத்துக்கனும் அதுலயெல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை! ஆர்வமும் இல்லை"

"ஒண்ணும் ஆச்சரியப் பட வேண்டாம் மிஸ்டர் நந்தா! உங்க டேட் ஆஃப் பர்த், டைம், பிளேஸ் ஆஃப் பர்த் சொல்லுங்க! வெரிஃபை பண்ணிடலாம்"

ஷர்மா கேட்ட தகவல்களைச் சொன்னதும் தனது லேப்டாப்பில் இணைய இணைப்பை உயிர்ப்பித்து ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தேடி அதில் இந்த விவரங்களை உள்ளீடு செய்தார்

"யங் மேன்! எனக்கு புரிஞ்சிடுச்சு! கடக லக்கினம் மகர ராசி! ஏழாமிடத்தில் சந்திரன் தனித்து நிற்கிறான்! ஆனா நீ மாய மந்திரமெல்லாம் கத்துக்குவேன்னு எனக்கும் நம்பிக்கை இல்லை! அஃப்கோர்ஸ் உன்னைப் போலவே எனக்கும் இவ்விஷயங்களில் நம்பிக்கையோ ஆர்வமோ கிடையாது"

அப்போது அவரது காரியதரிசி ஆனந்தி அறைக்குள் நுழைந்தாள்!
"ஷர்மா! நாம் திருவண்ணாமலை செல்ல வேண்டும்! கார் தயாராக இருக்கிறது!
இப்போது புறப்பட்டால்தான் இரவுக்குள் சென்று சேர முடியும்" என்று நினைவூட்டினாள்!

"மிஸ்டர் நந்தா! நாம மீட் பண்ணப் போறவங்க டீடெய்ல்ஸ் எடுத்துக்கிடீங்க அல்லவா?"

"ஓ! தனியா எடுத்து வெச்சிருக்கேனே"

"ஓகே! தென் லெட்ஸ் மூவ்"

மூவரும் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினார்கள்!

ஹோட்டல் வளாகத்தை விட்டு அந்த கார் வெளியேறியதும் ஹோட்டல் காம்பவுண்ட்டிற்கு எதிரே நின்றிருந்த ராஜேஷ் தனது சட்டைப் பையிலிருந்த செல்ஃபோனை எடுத்தான்!

"மகேஷ்! கார் புறப்பட்டுடுச்சு!"

செல்ஃபோனை அணைத்துத் தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு சாலையின் இருபுறமும் கவனித்து சாலையைக் கடந்து எதிர்ப்புறம் நோக்கி நடந்தான்!

சாலையின் எதிர்ப்புறத்தை அடையச் சில வினாடிகளில்
இடதுபுறமிருந்து அதி வேகமாக சரேலெனெ வந்த அம்பாசிடர் கார் இவன் மீது மோது 6 அடி தொலைவில் இவனை வீசி எறிந்தது! விழுந்த அதே நொடியில் அவனது உயிரும் பிரிந்திருந்தது!

சாலையில் அவனது ரத்தம் படரத் தொடங்கியது!

கார் மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது! தான் ஓட்டாமல் காரின் முன்புறம் டிரைவர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த நந்தா ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்!

ஆழ்ந்த தியானித்திலிருந்த சுவாமி நித்தியானந்தர் சட்டென உடல் சிலிர்த்தார்! பின்னர் மெல்லிய சிந்தனையுடன் கண்திறந்தார்!

"சுந்தரேசா! அங்கப்பன் மகள் செல்லாயியின் கந்தர்வ மணம் முடிவுக்கு வந்துவிட்டதென்று அவளிடம் தெரிவித்துவிடு! மேலும் அங்கப்பனை உடனடியாக என்னை வந்து சந்திக்கும்படிக் கூறி இங்கே அழைத்து வா! அவருக்குச் சில வேலைகள் இருக்கின்றன!"


தொடரும்...............!
Author: நாமக்கல் சிபி
•3/03/2009 12:08:00 pm

முதல் பகுதி

"சுவாமி"

குரல் கேட்டு தியானத்திலிருந்து விடுபட்டுக் கண்விழித்தார் நித்தியானந்தர்! இடுப்பில் சுற்றியிருந்த காவி வஸ்திரமும் விபூதிப் பட்டைகள் அணிந்த திருமேனியுமாய் முகத்தில் நிறைந்திருந்த பேரமைதியும், மேனியை அலங்கரித்த ருத்திராட்ச மாலைகளும் சித்தர் என்னுமளவிற்கு உண்டான தேஜஸ் கொண்ட முகப் பொலிவும் கண்களுக்குள் குடிகொண்டிருந்த சாந்தமும் பார்த்தவுடன் கைகூப்பித் தொழச்செய்பவையான தோற்றம் அவருடையது!
எத்தனை வயதைக் கடந்திருப்பார் என்று எளிதில் கணக்கிட்டுவிட முடியாது!

தலையில் முடிந்த நரைத்த ஜடாமுடியை வைத்து வேண்டுமானால் எண்பதைக் கடந்திருப்பார் என்று கூற முடியும்!

எதிரே பணிவாய் நின்றிருந்த சுந்தரேசனை புன்முறுவலுடன் நோக்கினார்!
"என்ன சொல்ல வருகிறாய்" என்று அவரது பார்வை கேட்டது!

"சுவாமி! ஒரு சந்தேகம்!" என்றான் சுந்தரேசன்!
"கேள்"
"இப்படி விபரீத சிந்தனைகளுடன் தீய சக்திகள் செயலாற்ற முனைந்திருக்கும்போது அவற்றைத் தடுப்பது எப்படி? மனித இனத்திற்கு தீங்குகள் விளையும் அல்லவா? அவர்களிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பது எப்படி சுவாமி"

"ஹெஹெ!" மந்தகாசப் புன்னகையுடன் சிறிது மௌனம் சாதித்தார்!

"சுந்தரேசா! எப்பொழுதெல்லாம் தெய்வ சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அற்ப மானிடர்கள் விபரீத விளைவுகளை ஏற்படுத்த எத்தனிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் இறைவன் தன்னால் அனுப்பப்பட்ட மானிடர்கள் மூலமே அவர்களைத் தடுத்து தண்டித்து பிறரைக் காக்கவும் செய்கிறான் என்பதை அறிந்ததில்லையா நீ"

"அது உண்மைதான் சுவாமி! ஆனால் நீங்கள் சொல்லிய இத்தகைய தீயவர்கள் சாதாரண மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டு மந்திர தந்திர சக்திகளால் தீங்கு விளைவிக்க இருக்கிறார்களே! இவர்களிடம் சாதாரண மானிடரால் எப்படி போரிட முடியும்? இறைவனே அல்லவா அவதரிக்க வேண்டும்"

"ம்! இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள் உண்டு! இவர்களை வெல்லுமளவிற்கு மந்திர தந்திர திறமைகளுடன் இனிமேலா இறைவன் படைக்கப் போகிறான்! ஏற்கனவே படைத்து விட்டிருக்கிறான் சுந்தரேசா!
அவன் விரைவில் இங்கே வரவேண்டும்! அவனது பணி இங்கிருந்தே தொடங்க வேண்டும் என்பது எழுதப் பட்டிருக்கிறது!"

"அம்மானுடன் இன்னும் தன்னை உணராத நிலையில் இருக்கிறான்! உணர்ந்தபின் அவனது பணி அவனுக்கு உணர்த்தப் படும்! அவனுக்கு அழைப்பு நேற்றே அனுப்பப்பட்டு விட்டது என்பதை அறியமாட்டாய் நீ"

"ஆஹா! அப்படியெனில் நிம்மதியாய் இருக்கிறது சுவாமி!"

"சுந்தரேசா! உலக உயிர்களுக்காக உன் மனம் கொள்ளும் கவலை எனக்கு ஒருபுறம் மகிழ்வை அளித்தாலும் உலக நிகழ்வுகள் உன்னை சஞ்சலத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் இன்னும் நீ பக்குவப் படாமால் இருக்கிறாயே என்று என் உள்ளம் துணுக்குறுகிறது"

"என் செய்வது சுவாமி! தீய சக்திகள் அழிவுப் பணிக்கான ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டன என்று நீங்கள் சொன்ன கணத்திலிருந்தே என் மனதில் கவலை குடி கொண்டு விட்டது! தவறெனில் மன்னியுங்கள் சுவாமி"

"ம்ஹூம்! இது உன் தவறல்ல சுந்தரேசா! இன்னும் சில காலம் ஆகும்! சஞ்சலங்களில் இருந்து உன்னை நீ விடுவித்துக் கொள்ள! சரி! நேரமாகிவிட்டது!
என்னுடன் வா! சில மூலிகைகள் தேட வேண்டிய வேலை இருக்கிறது!"
என்று கூறியவாறு எழுந்து குடிலின் வேலியைக் கடந்து அந்த காட்டுப் பகுதிக்குள் ஒற்றையடிப் பாதையில் நுழைந்தார் நித்தியானந்தர்! அவரைப் பின் தொடர்ந்து சென்ற சுந்தரேசன் சில அடிகள் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தைக் கடக்கும்போதுதான் நிமிர்ந்து பார்த்தான்..

மரத்தில் விழுதொன்றில் விநோதமான ஒரு துணிப்பையொன்று கட்டப் பட்டிருந்தது! தினமும் கடந்த போதெல்லாம் பார்த்ததில்லை! புதிதாக இருந்தது!

"சுந்தரேசா" நித்தியானந்தரின் குரல் கேட்டு மீண்டும் கவனத்தைப் பாதையில் செலுத்தி வேகமாக அவரைப் பின்தொடர்ந்தான்!


இவர்களின் பாதையில் எதிர்புறம் இருந்து விறகு பொறுக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த பெண்கள் மூவர் தங்கள் தலையிலிருந்த விறகுச் சுமைகளைக் கீழே வைத்துவிட்டு

"கும்புடுறேன் சாமி" என்று அவர் காலில் விழுந்து வணங்க
"ம்ம்! நலமுடன் வாழ்க" என்று ஆசீர்வதித்து அவர்களுக்கு தன் மடியிலிருந்து விபூதியை எடுத்து வழங்கினார் நித்தியானந்தர்!

"என்னம்மா! காய்ந்த குச்சிகளைத்தானே பொறுக்கிக் கொண்டு போகிறீகள்? மரம் செடிகளில் கை வைப்பது இல்லையே" என்று சிரித்தவாறே கேட்டார்.

"ஐயயோ! அப்படியெல்லாம் செய்வமா சாமி! காஞ்ச குச்சிகளைத்தான் எடுக்குறோம்! நீங்க சொன்னமாதிரித்தான் நடந்தாத்தானே எங்க பொழப்பு பிரச்சினையில்லாம போகும்"
கொஞ்சம் வாயாடிப் பேசும் பெண்ணொருத்தி முன்வந்து பேசினாள்! மீதமிருவரும் மௌனமாக நின்றார்கள்!

"ம்ஹூம்! நல்லது! அங்கப்பன் மகள் செல்லாயி மௌனத்தில் ஏதோ மர்மர் இருப்பது போல் இருக்கிறதே" என்று நித்யானந்தர் மர்மப் புன்னகையுடன் கேட்க
விக்கித்து நிமிர்ந்தாள் செல்லாயி!
Author: நாமக்கல் சிபி
•3/03/2009 09:24:00 am
முதல் நாள் கல்லூரிக்குள் நுழைந்தபோது முதலில் கண்ணில் தென்பட்டவள் அவள்தான் அன்பரசி! அழகான ராட்சசி, தேவதை, நடமாடும் தென்றல் என்றெல்லாம் வர்ணிக்கும் அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஃபிகர் எல்லாம் இல்லை! கல்லூரி மாணவர்களுக்கே உரிய பாஷையில் சொல்ல வேண்டுமெனில் அட்டு ஃபிகர்! அதைச் சொன்னதற்குக் கூட புதுசாய்ச் சேர்ந்த கூட்டாளி தினேஷ் என்னைக் கிண்டலடித்தான்! அப்பக் கூட இதை ஃபிகர் என்று சொன்ன முதல் ஆள் நான் தான் என்று!

லைப்ரரி எங்கே இருக்கு என்று கேட்டபோது அளவான புன்னகையுடன் கைகாட்டினாள். "அதோ அந்தப் பக்கம்"

பின்னர் நாட்கள் சென்றுகொண்டிருந்தன! அவ்வப்போது தலை நிமிர்ந்து பார்த்தால் சிறு புன்னகை! அவ்வளவே! யாருடனும் எளிதில் சிரித்துப் பேச மாட்டாள்! நண்பர்களுக்குள் பேசிக் கொள்வார்கள்! "டேய் அவளா பேசணும்னு எதிர்பார்க்கிறே! அவ ஒரு விடியா மூஞ்சிடா"

அவளுக்கும் ஒருவன் காதல் கடிதம் நீட்ட அதை வாங்கிய அவள் மிகவும் பொறுப்பாக மெனக்கெட்டு எழுதி முடித்த அசைண்மெண்டைப் போல் விடுதி வார்டனிடம் சமார்த்தாகக் கொண்டு போய் சமர்ப்பித்தாள்! அவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தார்களோ இல்லையோ எங்களின் கிண்டல்களால் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தான்!

"மச்சி! நீ வார்டனுக்கு லவ் லெட்டர் எழுதியிருந்தேன்னா கூட பெருமைப் பட்டிருப்பேண்டா! கரெக்டான ஆள் மூலமா கொடுத்தனுப்பிட்டியேன்னு உன் புத்திசாலித்தனத்தை வரலாற்று புத்தகத்துல எழுதி வெச்சிருபோம்! போயும் போயும் இவளுக்கு லெட்டர் எழுதி எங்க மானத்தையும் வாங்கிட்டியேடா"

இப்படியே ஆளுக்கு ஆள் அவளை ஓட்டிக் கொண்டிருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறிக் கொண்டே வந்ததுபோலிருந்தது எனக்கு!

எங்களுடன் நன்றாகப் பழகிய சில மாணவிகள் கூட அவளிடம் கொஞ்சம் டிஸ்டண்ட் வெச்சிக்கோ என்றே கூறியிருந்தார்கள்! ஆனாலும் ராஜி மட்டும் கொஞ்சம் குளோசாக அவளுடன் பழகிக் கொண்டிருந்தாள்! அருகருகேதான் அமர்வார்கள்!

"ஹே ராஜி! எங்க இன்னிக்கு உன் ஃபிரண்டு காணோம்?"

"ஏன் உதை வேணுமா உனக்கு? அவளைப் பார்க்காம இருக்க முடியலையா? எல்லாம் திமிரு"

கம்ப்யூட்டர் லேபில் டாஸ் மெசேஜ் மூலமாக ஒரு நாள் செய்தி அனுப்பினேன்!
"ஹாய்! ஹவ் ஆர் யூ?"
கம்ப்யூட்டரில் ஐபி மட்டுமே தெரியும் என்பதால் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்! பின்னர் அமைதியாக அமர்ந்து கொண்டாள்!

நான் ராஜியை அழைத்தேன்!
"ராஜி! ஹாய் ஹவ் ஆர் யூன்னு ஒரு மெசேஜ் அனுப்பினேன் கோவிச்சிக்க மாட்டேளே!"

"நீ எவ்ளோ தடவை சொன்னாலும் அடங்க மாட்டே! அவளோட அப்பாவை கூட்டிட்டு வரப் போறா! உதை வாங்கித்தான் அமைதியாவே நீயி!" சன்னமான குரலில் எச்சரித்தாள் ராஜி!

"ஐயயோ! அப்போ அவகிட்டே நான்தான் அனுப்பினேன்னு சொல்லிடு! அப்படியே ஸாரி சொன்னேன்னும் சொல்லிடு"

தலையாலடித்துக் கொண்டு எழுந்து அவளருகே சென்றாள்.

சிறிது நேரத்தில் எனக்கும் மெசேஜ் வந்தது!

"ஃபைன், நோ நீட் ஆஃப் ஸாரீஸ்"

"அட" என்று வியந்து கொண்டேன்! எழுந்து நின்று பார்த்தேன்! புன்னகைத்தாள்!

இப்பொழுதெல்லாம் ராஜியுடன் இருக்கும் நேரங்களில் என்னுடனும் அவ்வப்போது சிரித்துப் பேசுகிறாள்! அவ்வப்போது என் மனசுக்குள் வந்து சென்றது! ஆரம்பத்தில் நான் செய்த வர்ணனை " அட்டு ஃபிகரு"


எலக்ட்ரானிக்ஸ் லேபில் என் பேட்சில் இரண்டு பெண்கள் இருந்ததாலும், அன்பரசியின் பேட்சில் அவள் மட்டுமே பெண் என்பதாலும் லெக்சரரிடம் கேட்டு எனது பேட்சிற்கே மாறிக்கொண்டாள்!

அன்று எங்கள் லதா மேடம் ஒரு சர்க்யூட் பற்றி எங்கள் பேட்சிற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்க

நாங்களிருவரும் சற்றுத் தள்ளி பேசிக் கொண்டிருந்தோம்!

"தண்ணி அடிச்சா மயக்கமா வருமா? எப்படி இருக்கும்" இது அவள்

"ஆமா! அதாவது அப்படியே பூமியிலேயே பறக்குற மாதிரி இருக்கும்! நம்ம வெயிட்டே நமக்குத் தெரியாது! ஒரு மாதிரி கிறக்கமா இருக்கும்!"

"எதுக்காக அதுலே கூல்ட்ரிங்க்ஸ் கலந்துக்குறாங்க! அப்படியே குடிச்சா என்ன ஆகும்?"

"அப்படியேவும் சில பேரும் குடிப்பாங்க! ஆனா ஆல்கஹால் ஸ்ட்ராங்கா இருக்கும்! வயிறு எரியும்! கெமிஸ்ட்ரி லேப்லே ஆசிட்லே தண்ணி கலந்தா எஃபெக்ட் குறையுமல்ல அது மாதிரி"

அவள் விழிகள் வியப்பில் விரிந்தன! எனக்கு அப்போதும் கூட ஏனோ அவள் அழகாகத் தெரிந்தாள்!

அதற்குள் எங்கள் மேடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்து விட

"இதுக்குத்தான் அந்த பேட்சிலேர்ந்து இந்த பேட்சுக்கு மாறி வந்தியா?...." என்று திட்ட ஆரம்பிக்க தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்!

"ஹேய் ஹே! எதுக்கு இப்ப அழறே நீ! என்னைக் கூடத்தான் திட்டினாங்க! என்னைப் பாரு! நான் அழுதனா?"

ராஜி முறைத்துக் கொண்டிருந்தாள்!

"இங்க பாருப்பா! பேசினோம்னு மட்டும் தெரிஞ்சிதான் திட்டினாங்க! இன்னும் என்ன பேசினோம்னு தெரிஞ்சிருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சிப்பாரு"
என்று சமாதானப் படுத்தினேன்!

"இனிமெ மேடம் திட்டினதுக்கெல்லாம் அழக் கூடாது! அமைதியா தலையை குனிஞ்சி நின்னுகிட்டிருந்தா போதும்! வாய் வலிக்க ஆரம்பிச்சதும் அவங்களா நிறுத்திடுவாங்க! என்ன" என்றபோது க்ளுக் என்று சிரித்தாள்!

அன்று மதிய உணவு வேளையில்
"நான் கொண்டு வர சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டீங்களா" என்றாள்.

"ஏன் சாப்பிடாம! கொடுத்தா சாப்பிடுவோம்!" என்றேன்!

"சரி கையை நீட்டுங்க"

ஒரு கை சாதம் எடுத்து என் கையில் வைதுக் கொண்டே கேட்டாள்! ராஜி உங்களை அண்ணான்னு சொல்லுறா? நானும் உங்களை அண்ணான்னு சொல்லாமா?

"ஹக்!" சோறு தொண்டையிலேயே சிக்கி நின்று கொண்டது!
ராஜி தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்!

"அம்மா தாயே! ஒரு தங்கச்சியை வெச்சிகிட்டே நான் படுற பாட்டை சொல்லி மாளாது! நீ வேற வேணாம் தாயே!" சிரித்துக் கொண்டே சொல்லி மழுப்பினேன்!

ராஜி என்னை பாவமாகப் பார்த்தாள்! நான் சட்டென அங்கிருந்து நகர்ந்து கொண்டேன்!

சங்கமம் - போட்டிக்காக : தலைப்பு "கல்லூரி"
Author: நாமக்கல் சிபி
•2/27/2009 09:30:00 am

நந்தா என்கிற நந்தகோபால் விமான நிலையத்தை நெருங்குவதற்குள் மணி இரவு 11 ஆகிவிட்டிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு விரைந்து உள்ளே சென்றான். சரியாக 11.20 க்கு விமானம் வந்திறங்கிவிடும். நியூயார்க்கிலிருந்து வரும் ஜெட் ஏர்வேஸ் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை முத்தமிட்டபோது நந்தா வரவேற்புப் பகுதியை அடைந்திருந்தான்.

வெகுநேரம் காக்க வைக்காமல் உற்சாகமான புன்னகையுடன் வெளிவாசலை நோக்கி நடந்தார் புரஃபசர் ஷர்மா! ஐம்பதைத் தொடும் வயதை அறிவிக்கும் வண்ணம் அவரது முன்னந்தலையில் காணாமல் போயிருந்த கேசமும், பின்னந்தலையின் நரையும் பளிச்சென வெளிப்பட்டிருந்தன. இருப்பினும் வயதை ஒவ்வாத சுறுசுறுப்பு அவரது நடையில் தெரிந்தது! அவருடன் உதவியாளினி ஆனந்தியும் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். இருபத்தைந்தைக் தைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நம்ப மறுத்தாலும் இருபத்தெட்டைக் கடந்து இரு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன என்பதே உண்மை!

வரவேற்புப் பகுதியை அடைந்தவுடன் தேடுவதற்கு வாய்ப்பளிக்காமல் "மிஸ்டர் ஷர்மா" என்று குரல் கொடுத்தான் நந்தா. பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியேற லேப்டாப் மற்றும் இதர பெட்டிகளை டிராலியில் வைத்து உருட்டிக் கொண்டு பின் தொடர்ந்தாள் ஆனந்தி!

அவர்கள் மூவரையும் நிரப்பிக் கொண்டு நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டல் நோக்கி புறப்பட்டது கார்!

சாலையில் கவனத்தை வைத்து ஓட்டிக் கொண்டே வினவினான் நந்தா!
"பயணம் எப்படி இருந்தது மிஸ்டர் ஷர்மா? ஒன்றும் சிரமங்கள் ஏற்படவில்லையே?"

"வெரி நைஸ் யங்க் மேன்! இனிமையான பயணம்! இன்னும் சொல்லப் போனால் அந்த பெனிசுல்வேனியப் பல்கலைக் கழகத்தில் கழித்த 4 நாட்களுமே மிக அருமையாகக் கழிந்தன! நல்ல பல மனிதர்கள், ஆர்வம் மிக்க மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுடனான கலந்துரையாடல், விருந்து என்று ஒரே அமர்க்களமாக இருந்தது!"

இரவு நேரக் நெரிசலற்ற சாலையில் முப்பது நிமிடங்களில் ஹோட்டல் வளாகத்தில் கார் நுழைந்தது!

"ஓகே மிஸ்ட ஷர்மா! நன்கு ஓய்வெடுங்கள்! மீண்டும் நாளை மதியம் வந்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன்! குட் நைட்!"
"மிஸ் ஆனந்தி! நீங்களும் நன்கு ஓய்வெடுங்கள்! குட் நைட்" என்று விடைபெற்றான் நந்தா!

கார்பார்க்கிங்கை நெருங்கி நேரம் பார்க்கையில் மணி 2 ஆகிவிட்டிருந்தது!
கார் டாஷ் போர்டைத் திறந்து பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்தான்! பார்க்கிங் காவளாளியின் சம்பிரதாய சலாம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காரை வெளியே எடுத்தான்.

காரின் ஸ்டீரியோவை ஆன் செய்து தனக்கு பிடித்த மெலோடீச் கலெக்ஷனை ஓடவிட்டான்! ரம்யான அந்த மெலோடி பாடல்களுக்கு நடுவே சிறிது நேரமே சந்தித்த ஆனந்தி அவன் நினைவில் வந்து வந்து சென்றாள்.

ஸ்டீரியோவின் மெலோடியஸில் குழைந்த சன்னமான எஸ்.பி.பியின் குரலையும் தாண்டி அவன் காதுகளில் கணீரென்ற குரலில்

"சூடப்பா சந்திரனார் மூன்றேழ் ஐந்து
சுத்த இந்து பதினொன்றில் தனித்திருக்க
மாடப்பா மந்திரங்கள் செய்வான் காளை
மகத்தான வாதமொடு வைத்தியம் செய்வான்"

என்று ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் புரியும் வண்ணம் மெதுவாக நிதானமாக அழுத்தம் திருத்தமாக ஏதோ ஒரு செய்யுளை சொல்லிக் கொடுப்பது போல் அவனது செவிகளில் கேட்டது!

தொடரும்..................!
Author: நாமக்கல் சிபி
•2/12/2009 01:54:00 am


"என்னடா சொல்றே! நீ சொல்றது நிஜமா? அப்போ அந்த பொறம்போக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையா?"


"ஆமாங்க தலைவரே! அந்தப் பையன் அவங்க ஊர்லயே ஒரு பொண்ணை விரும்பிகிட்டிருக்கான்! அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்! இப்போ அவங்க வீட்டிலயும் பச்சைக் கொடி காட்டிட்டாங்க!"


"ம்! என் தங்கச்சி விரும்பிட்டாங்கற ஒரே காரணத்துக்காகத்தான் அவன் மேல கை வெக்காம விட்டிருந்தேன்! எப்போ அவன் என் தங்கச்சியை விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு தெரிஞ்சிதோ, அவனை உயிரோட விட்டு வெக்க என் மனசு இடம் கொடுக்கலை! நம்ம முரளியை வந்து என்னை பார்க்கச் சொல்லு! அப்படியே அந்தப் பையனோட ஃபோட்டோ ஒண்ணு எனக்கு வேணும்!

.....................................................................................................................................................................

"அண்ணே! நான் காலேஜுக்கு கிளம்புறேன்"
அவசர அவசரமாக நந்தினி புறப்பட்டுக் கொண்டிருந்தாள்!

"அட! என்னம்மா இது! டிஃபன் கூட பண்ணாம! சாப்பிட்டுட்டுப் போம்மா! மஞ்சுளா நந்தினிக்கு டிஃபன் கூட எடுத்து வைக்காம என்ன பண்ணிகிட்டிருக்கே அங்கே?"

சமையலைறை நோக்கிக் குரல் கொடுத்தான் தென்னரசு!

"அண்ணே! ப்ளீஸ் காலேஜ் கேண்டீன்ல போயி பார்த்துக்கிறேன்! அண்ணி நிதானமா சமைச்சி உங்களுக்கு கொடுப்பாங்களாம்! நீங்க சமர்த்தா சாப்பிடுவீங்களாம்! நான் இப்போ காலேஜ்க்கு கெளம்புவேணாம், சரியா"

கொஞ்சலாகக் கேட்டாள்.

"சரி! பார்த்துப் போம்மா! நல்ல பொண்ணுடா!" தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டே வழியணுப்பி வைத்தான்.


சரியாக இரண்டு வருடங்கள் கழித்து..........................................................

தனது செல்ஃபோன் ஒலிக்க காதருகே கொண்டு சென்றான் சக்தி!

"என்ன! இப்பவா! ஹாஸ்பிடல் கொண்டு போயாச்சா! இதோ இப்பவே கிளம்பி வரேன்"..

திடுமென டென்ஷன் கூடிப்போனது! அவசர அவசரமாக தனது மேலாளரிடம் கூறி விட்டு அலுவலக வாசலில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்தான்!

மருத்துவமனை ரிஷப்ஷனில் அறை எதுவென விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றான் சக்தி!

அவனது பெற்றோர்கள் மற்றும் சுகந்தியின் பெற்றோர்களும் சிறிதளவு பதட்டம் குறைந்து ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்! சக்தி உள்ளே வந்ததும் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.

"என்னடா! ரொம்ப வலி எடுத்துடுச்சா!"
"ம். எங்க நீங்க வராம ஆஃபீஸ்லயே இருந்துடுவீங்களோன்னு கவலையாயிடுச்சு தெரியுமா! "

தலையைத் தடவி விட்டான்!

"நான் வராம இருப்பனா சுகந்தி! நீ என் உசிராச்சே! இப்போ என் இன்னொரு உயிரையும் சுமக்குறே! இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த உயிரையும் கைல கொடுக்கப் போறே! இந்த நேரத்துல கண்டிப்பா நான் உன் கூட இல்லாம எங்கடா போயிடுவேன்"

"என்னங்க! நமக்குப் பிறக்கப் போறது ஆணா பெண்ணா?"

"எதுவா இருந்தாலும் நமக்கு ஓகே சுகந்தி!"

"எனக்குப் பொண்ணுதான் பிறக்கணும்னு ஆசையா இருக்குங்க சக்தி!"

"அப்ப கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும்! ஆமா பொண்ணு பிறந்தா என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிருக்கே!"

"நான் என்ன பேர் வைக்கணும்னு சொல்வேன்னு தெரியாதா உங்களுக்கு!"

"இப்ப எனக்கு எதுவும் யோசிக்கத் தெரியலைடா! நீயே சொல்லிடேன்!"

மெதுவாக சக்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்! அவளது கண்கள் கொஞ்சம்போல கலங்கியது!

"நம்ம பொண்ணுக்கு நந்தினின்னு பேர் வைக்கணுங்க சக்தி!"

"ஹேய்! என்ன இது இப்பப் போயி கண் கலங்குறே!"

மனசுக்குள் அவனுக்கும் கொஞ்சம் பாரமானது! ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள வில்லை!

அதற்குள் அந்த அறைக்குள் வந்த நர்ஸ் இருவர் "சார்! நீங்க வெளியே போயி இருங்க! டைம் ஆச்சு! இவங்களை ஆபரேஷன் தியேட்டர்க்கு கூட்டிட்டுப் போகணும்" என்றார்கள்!

பழைய நினைவுகள் சக்தியின் மனதில் நிழலாடத் துவங்கின!

கல்லூரி கேண்டீனில்
"சக்தி! எப்படியோ உங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க போல! கங்க்ராட்ஸ் சக்தி" என்றாள் நந்தினி!

"ஆமா நந்தினி! ஒரு வழியா சுகந்தியை அறிமுகப் படுத்தி வெச்சி பர்மிஷன் வாங்கிட்டேன்! அம்மாவுக்கு சுகந்தியை ரொம்பவே பிடிச்சிப் போச்சு!"

காபி கோப்பையை மேசையில் வைத்துவிட்டு கேண்டீனை விட்டு வெளியேறி வகுப்பை நோக்கி நடந்தனர்!

திடீரென யாரோ ஓடி வருவது போலத் தோன்ற சட்டெனத் திரும்பினாள் நந்தினி!

அதற்குள் ஓங்கிய அரிவாள் ஒன்று சக்தியின் பின்புறக் கழுத்தை நோக்கி வெகு வேகமாக நெருங்க.. சட்டென சக்தியின் விலாவைப் பிடித்து நந்தினி தள்ளிவிட்டாள்!

"சக்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ............"

சக்தி சுதாகரித்து திரும்புவதற்கு எடுத்துக் கொண்ட ஒரே விநாடி்ப் பொழுதில் நடந்து முடிந்திருந்தது!

"டேய்!...." ஓடிவருவதற்குள் வேட்டியும் கைலியுமாய் வந்திருந்த கும்பல் ஓரே ஓட்டமாக ஓடி விட்டிருந்தது!

"நந்தினி...நந்தினி...." அலறிக் கொண்டிருந்தான் சக்தி!

கழுத்தில் வெட்டுப் பட்ட நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை இழந்து கொண்டிருந்தாள்!


"குவா...குவா.." என்ற குழந்தையின் அழுகுரல் சக்தியை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது! ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்த டாக்டர் சண்முகவடிவு சக்தியை நெருங்கினார்.

"கங்க்ராஜுலேஷன்ஸ் சக்தி! சுகந்தி ஆசைப் பட்ட மாதிரியே பொண்ணுதான் பிறந்திருக்கா உங்களுக்கு! இன்னும் அரை அவர்லே சுகந்தி கண்னு முழிச்சிடுவாங்க நீங்க போயி பார்க்கலாம்.."

மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போயிருந்த சக்தி, சுகந்தி ஆகியோருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியே இருந்தன!

"சொன்ன மாதிரியே என் மருமவ பொண்ணைப் பெத்துக் குடுத்துட்டா! சக்தி!

என் பேத்திக்கு என்னடா பேரு வைக்கப் போறே!"

"நந்தினி" என்றான் சக்தி!

அருகிலிருந்த பெருமாள் கோவில் ஒலி பெருக்கியிலிருந்து சன்னமாக நாலாயிர திவ்யப் பிரபந்த வரிகள் கேட்டன.

"பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விருமபியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே"


-:முற்றும்:-

அனைத்துப் பகுதிகளின் தொகுப்பு
Author: நாமக்கல் சிபி
•1/07/2009 06:28:00 am

நிலையானவை அல்ல
உறவுகள்
அவை
வருவதும் போவதுமாய் இருப்பவை!
உண்மையும் பொய்களுமாய் இருப்பவை.
சிவம் என்னும் பேரானந்தம் மட்டுமே
சத்தியமானதும் நிலையானதும் நிறைவானதும் .

- சுவாமி பித்தானந்தா

நாலாம்பிறை என்ற புதிய தொடர் இத்தனி வலைப்பூவிலிருந்து தொடங்கும். இனி எனது சிறுகதை மற்றும் தொடர்கதைகள் யாவும் இவ்வலைப்பூவிலேயே பதிவு செய்யப் படும்!

தொடரும் அன்பான ஆதரவுகளுக்கும், என்னை மெருகேற்றும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி



பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!