Author: நாமக்கல் சிபி
•9/10/2006 03:56:00 am
முதல் பகுதி

ஒரு வாரத்தில் ஜூரம் விட்டிருந்தது. மீண்டும் எனது வேலையைக் கவனிக்கத் துவங்கினேன். அந்த வாரம் முழுக்க அந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படவில்லை. அதற்கு அடுத்த வாரம்தான் சென்றேன்.

வழக்கம்போல் மாணிக்கம் டீக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டேன்.

"ஏம்பா, விஷயம் தெரியுமா..." என்றார் மாணிக்கம். கேள்விக்குறியுடன் நிமிர்ந்து பார்த்தேன்.

"ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த ஒத்தைப் புளிய மரத்துப் பக்கம் ராத்திரி நேரத்துல போன ஒரு ஆளை அந்த சின்னத் தாயோட ஆவி அடிச்சிடுச்சு.."

"அப்படியா..? யாரு அந்த ஆளு..?" என்றேன்.

"அதாம்பா... நம்ப கள்ளுக்கடை சோமு இருக்கான்ல அவனோட தம்பி...நல்லா மப்புல அந்த பக்கம் போயிருப்பான் போல.. போட்டுத் தள்ளிடுச்சு...மரத்துக்கு கீழயே அவனோட பொணம்..பொடனியில அடிச்சிருக்கும் போல... அவனுக்கும் கொஞ்சம் கொழுப்புதான் செல்வராசு..போன மாசம் அவனோட கூட்டாளிப் பசங்ககிட்ட ராத்திரி 12 மணிக்கு தைரியமா ஒத்தைப் புளிய மரத்துல போயி கயிறு கட்டிட்டு வர்றேன்னு இங்க உக்காந்துதான் பந்தயம் கட்டிகிட்டிருந்தான், அதிலயெல்லாம் விளையாட்டு வேணாம்பான்னு நான் கூட சொன்னேன்..
சொன்னா யாரு கேக்குறாங்க.." என்று அலுத்துக் கொண்டான்.

கடையிலிருந்து கிளம்பினேன். எதிரில் பாத்திரக் கடை சுந்தரம் வந்து கொண்டிருந்தார். மாட்டுவண்டியில் அவரது வீட்டு சாமான்கள், மற்றும் கடை சாமான்கள். வீடு மாற்றிப் போகிறார் போல. என்னைப் பார்த்ததும் நின்றார்.

"'என்ன செல்வராசு ரெண்டு வாரமா.. இந்தப் பக்கம் பார்க்க முடியலை?"

"கொஞ்சம் உடம்பு சரி இல்லை..அதான்..என்ன திடீர்னு பாத்திரம் பண்டமெலாம்?"

"ஆமாப்பா, எங்க சொந்த ஊருக்கே போறேன், வியாபாரம் சரி இல்லை.. எங்க ஊருக்கே போய்டா பங்காளி, மாமன், மச்சான் எல்லாரும் இருக்காங்க, அவங்க கூட சேர்ந்து எதுனா பிழைப்பை ஓட்டிக்க வேண்டியதுதான்...சரி செல்வராசு நான் வர்றேன்.."

வண்டியும் நகர ஆரம்பித்தது. வண்டியின் பின்புறம் சுந்தரத்தின் மனைவியும் மகளும் அமர்ந்திருந்தனர். அவர் மகளைப் பார்த்தேன். அவளும் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் நன்றி தெரிந்தது. வருகிறேன் என்று சொல்வது போல் தலையசைத்தாள்.
நானும் சிறியதொரு புன்னகையுடன் தலையசைத்தேன்.

"தன்னைக் காப்பாத்திக்க முடியாமதான் அந்த சின்னத் தாயி செத்துப் போனா.. இப்போ உன்னைக் காப்பாத்துறதுக்காக கொலைப் பழியவும் அவளே ஏத்துகிட்டா.." என்று நினைத்துக் கொண்டேன்.
Author: நாமக்கல் சிபி
•9/10/2006 02:35:00 am
முன் குறிப்பு : சனிக்கிழமை எதிர்பார்த்து வருகை தந்த வாசகர்கள் மன்னிக்கவும். கடினமான வேலலப்பளுவும், கட்டாய ஓய்வு வேண்டுமென்ற என் உடலின் பிடிவாதமும் என்னை நேற்று ஓ.பி அடிக்க வைத்துவிட்டன. அதனால் நேற்று எழுத இருந்த இந்த அமானுஷ்யச் சிறுகதையை இன்று பதிவிட்டுள்ளேன். மேலும் எனக்கே தெரியாமல் எனது வலைப்பூவில் கைப்புள்ளை அவர்கள் கட்டி வைத்த தாயத்தும் அமானுஷ்யங்களை வர விடாமல் செய்துவிட்டது.

ஒற்றைப் புளிய மரம்

Photobucket - Video and Image Hosting

அன்றும் புறப்படுவதற்கு 11 மணிக்கு மேலாகி விட்டது. எனது இருப்பிடத்திற்குச் செல்வதற்குள் எப்படியும் இரவு 2 ஆகிவிடும். அந்த ஒற்றைப் புளிய மரம் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று நினனக்கும்போதே திக்கென்றது. எனது யமஹாவை உயிப்பித்தேன். சில்லென்ற காற்றுடன் இலேசாகத் தூறலிடத் தொடங்கியது.


முன்பெல்லாம் பல முறை இதே வழியாக எந்நேரமும் பயமின்றி சென்று வந்திருக்கிறேன். அப்புளிய மரத்தின் வரலாறு அறியாதவரை. டீக்கடை மாணிக்கம்தான் ஒரு நாள் கேட்டார்.
"ஏம்பா செல்வராசு, ராத்திரி எந்நேரம்னாலும் புறப்பட்டு போறியே, அந்த ஒத்தைப் புளிய மரம் பத்தி ஏதாச்சும் தெரியுமா?" என்று பீடிகை போட்டவாறே கேட்டார்.

"ஊருக்கு வெளியே தனியா இருக்கே அதுவா? ஏதும் தெரியாதுங்களே, சொல்லுங்க கேப்போம்."
என்றேன் டீயை உறிஞ்சியவாறே.


"அந்தக் காலத்துல மிராசு ஒருத்தனை நம்பி ஏமந்து போன ஏழைப் பொண்ணு சின்னத்தாயி, அவ அந்த மரத்துலதான் தூக்குப் போட்டுகிட்டு செத்துப் போனாளாம், அப்புறமா அந்த மிராசோட குடும்பத்துல இருக்குறவங்க ஒவ்வொருத்தரா துர்மரணத்தை சந்திச்சே அந்தக் குடும்பம் அழிஞ்சிதாம். இப்பக் கூட நேரம் கெட்ட நேரத்துல அந்தப் பக்கமா போயி வந்தவங்க அந்த மரத்துக்குப் பக்கத்துல வித்தியாசமா அழுகிற சத்தம் எல்லாம் கேக்குதுன்னு சொல்லுவாங்க" என்றார்.

அதன் பிறகு எப்படியாவது இரவு நேரங்களில் அந்த வழியே பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்தே வந்தேன். எப்போதேனும் தவிர்க்க முடியாமல் இரவு நேரங்களில் கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோதெல்லாம் கூட மனதில் ஒரு கிலி தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை.


இப்போதும் அப்படித்தான். மனசுக்குள் திக் திக்கென்றுதான் இருந்தது. வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். அந்தப் புளியமரம் இருக்கும் இடத்திற்கு இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் இருந்தது. வேகமாகக் கடந்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கையில்தான் சட்டென வண்டி மக்கர் செய்தது. திடீரென வேகம் குறைந்து.. அப்படியே உயிரிழந்தது.


"அடச் சே! இன்னிக்கு நமக்கு கெட்ட நேரம்தான் போலிருக்கு.." என்றவாறே இறங்கி வண்டியை சாலையின் ஓரத்திற்கு தள்ளிச் சென்றேன். பயம் மனதின் ஓரத்தில் தெளிவாய் எட்டிப்பார்த்தது.
அடிவயிற்றில் சிலீரென்ற உணர்வு. சில்லென்ற காற்று வீசும் நேரத்தில் கூட நெற்றியில் வியர்வை
வழியத் தொடங்கியது. இருட்டு வேறு. அப்படி இப்படி என்று ஒரு வழியாய் வண்டி சமாதானமானது. இம்முறை கிக் செய்தால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்ற நம்பிக்கை வந்தது.

வண்டியில் ஏறி அமர்ந்து கிக் செய்தேன்.

"ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும்......."
"அப்பாடா...கடவுளே.. நான் வேண்டிக்கொண்ட எல்லா கடவுளுக்கும் நன்றி..."

ஹெட்லைட் வெளிச்சத்தை உமிழ்ந்தது. ஹெட்லைட்டின் வெளிச்சத்தில் ஏதோ ஒரு உருவம் என்னை நோக்கி ஓடி வருவது போல் தெரிந்தது...

"நிஜமா அல்லது பிரம்மையா...."

கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தேன். நிஜமாகவே என்னை நோக்கிதான் வந்து கொண்டிருந்தது. எனக்குள் இரத்த ஓட்டத்தின் வேகம் பி.டி உஷாவின் ஓட்டத்தை விட அதிகரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டே நெருங்க நெருங்க "ஜல்..ஜல்..ஜல்..ஜல்" என்ற கொலுசின் ஓசையும் தெளிவாகக் கேட்க....

"செல்வராசு இன்னிக்கு உன் கதை கந்தல்டா!..."

என்று எண்னி முடிப்பதற்குள் கண் மண் தெரியாத வேகத்தில் என் மீது மோதி நின்ற அந்த உருவம் சட்டென சுதாகரித்துக் கொண்டு என்னைத் தாண்டி ஓட ஆரம்பித்தது.. இந்த முறை கொலுசின் சத்தத்தோடு சன்னமாக விசும்பலின் ஒலியும் கேட்டுத் தேய்ந்தது.

சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் நின்றிருந்த நான்..திடும்மென சுய நினைவுக்கு வந்தவனாய் வண்டியைக் கிளப்பினேன். அடித்துப் பிடித்து எனது அறைக்கு வந்து சேர்ந்தபோது 2.30 அகி விட்டிருந்தது. வியர்வையால் உடல் தொப்பலாக நனைந்திருந்தது. குளித்து உடை மாற்றிக் கொண்டு உறங்கலாம் என்று சட்டையைக் கழற்றி மாட்டும்போதுதான் கவனித்தேன் இடது தோள்பட்டை பகுதியில் இருந்த ரத்தக் கரையை.


"டேய் செல்வராசு.. என்னடா உடம்பு இப்படிக் கொதிக்குது..ராத்திரி நல்லா மழைல நனைஞ்சிட்டியா..?" என்று நைட் சிஃப்ட் வேலை முடிந்து காலை 8.00 மணிக்கு திரும்பி வந்த எனது நண்பன் என்னை எழுப்பியபோதுதான் கண் விழித்தேன்.



Author: நாமக்கல் சிபி
•3/15/2006 07:04:00 pm
இது வரை

இன்ஸ்பெக்டர் தேவசகாயம் புன்முறுவலுடன் கூறினார்.

"ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் சிவப்பிரகாஷ்! இது வரை வசந்தியோட கணவனுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லாலததால் வேற வழியில்லாம அந்தப் பொண்ணு இறந்தது ஒரு சமையலையில் நடந்த விப த்துதான்னு ஃபைலை குளோஸ் பண்ணினோம். நல்ல வேளையா அந்த பொண்ணே தன் கைப் பட எழுதின லெட்டர்ஸக் கொண்டு வந்தீங்க, இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் சட்டத்துல இருந்து தப்பிக்கக் கூடாது சார், எப்படியும் 4 வருஷம் உள்ள இருக்க வேண்டியிருக்க இருக்கும்னு நினைக்கறேன்"

"கண்டிப்பா சார், இந்த பாழாய்ப்போன வரதட்சணையால இன்னும் இதுபோல எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டிருக்கோ, உங்களுக்குதான் முக்கியமா நன்றி சொல்லணும், முடிஞ்சி போன கேஸா இருந்தாலும் மறுக்காம புகாரை ஏற்று எல்லாரையும் மறுபடி விசாரணை செஞ்சி துரிதமா நடவடிக்கை எடுத்திருக்கீங்க"

"அப்படியில்லை சார், எங்களுக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் அப்போ கிடைக்கலே! எனிவே தாங்க் யூ மிஸ்டர் சிவப்பிரகாஷ், தங்க் யூ மிஸ்டர் சக்தி, கிளம்பறேன்"

சிவப்பிரகாஷைப் பார்த்தான் சக்தி. ஏதோ ஒரு நிம்மதி தெரிந்தது அவன் முகத்தில்.

"அப்புறம் என்ன! நீ எப்போ வெளியூர் கிளம்பப் போறே?"

"நல்லா சொல்லுங்க சக்தி, திரும்பவும் பேனாவும் பேப்பருமா எங்கியாவது உட்கார்ந்திகிட்டிருக்கப் போறாரு" தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டியவாறே வெளியில் வந்தாள் தாரா.

"தாரா, சக்தி... நானும் யோசிச்சேன்.. பையனையும் அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்க்கப் போறோம், அதனால இப்பவே ஒரு 15 நாள் அந்தமான் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் நேத்தே டிக்கெட்ஸ் எடுத்துட்டேன்."

சக்தி இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் தன் மகன் அஷோக்குடன் சேர்ந்து கொண்டு "ஐய்யா.. அந்தமான் போகப் போறோம்.." என்று உற்சாகமானாள் தாரா.

சக்தியும் தனது வீட்டிற்குக் கிளம்பினான். நன்கு காய்ச்சிய பசும்பாலை குறைந்த அளவு சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு சிவாவின் மேசைக்கருகில் வந்தாள் தாரா.

"என்னங்க, என்ன பண்ணுறீங்க இப்போ? டாக்டர் அங்கிள்தான் ரெஸ்ட் எடுக்கச் சொன்னாருல்ல?"

அவளை அன்பாக நோக்கிய சிவா
"இப்போ கதை எழுதல டியர், அந்தமான்ல என்னோட வாசகர்கள் சில பேரு இருக்காங்க, அவங்களை சந்திக்கறதுக்காக அவங்க முகவரியெல்லாம் எடுத்து வெச்சிகிட்டிருக்கேன்...."

"ஐயோடா... வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறியாச்சா? எப்படியோ போங்க சாமி" என்றவாறு டம்ளரை மேசை மீது வைத்து விட்டு நகர்ந்தாள்.

-: முற்றும் :-
டிஸ்கி : கதையில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

சிறு கதையாய் ஆரம்பித்து ஒரு தொடர் கதையாய் முடித்திருக்கிறேன். எனக்கு இது ஓர் நல்ல அனுபவமே .விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த 13 பகுதிகளையும் தொடர்ந்து படித்த (ஓரிரு!?) வாசக உள்ளங்களுக்கும், பொறுமையிழந்து (கடுப்பாகித்தான்) பாதியில் விட்ட வாசக அன்பர்களுக்கும் திகில் கதையோ என நினைத்து திரும்பிப் பார்க்காமல் ஓடிய அனைவருக்கும் என் நன்றி.

முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே


Author: நாமக்கல் சிபி
•3/15/2006 03:21:00 pm
இது வரை

மிக நீண்ட மொனத்திற்குப் பிறகு சக்தி தொடர்ந்தான்.

"சோ, அந்த வசந்தியோட ஆவிதான் சிவாவை ஆட்கொண்டிருக்குன்னு சொல்றீங்களா டாக்டர்?"

"யெஸ்! யூ ஆர் அப்சல்யூட்டலி ரைட்"

"ஆனா அந்த ஆவியால இதுவரை எந்த தொந்தரவும் இல்லையே டாக்டர்?"

"கரெக்ட் அந்த ஆவியின் நோக்கமே மற்றவங்களுக்கு தொந்தரவு கொடுப்பதல்ல, தான் இறந்தது பிரசவத்துல அல்ல, தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளால் தானே மேற்கொண்ட தற்கொலைன்னு தெரியப் படுத்தனும்"

"இருக்கட்டும் ஆனா அதுக்கு சிவாவை ஏன் டாக்டர் தேர்ந்தெடுக்கனும்?"

"நல்ல கேள்வி, யாரிடமும் மனம் விட்டு சொல்ல முடியாத விஷயங்களைக் கூட ஒரு வாசகியா நிறைய கடிதங்கள் மூலம் அந்தப் பொண்ணு இவருக்கு எழுதியிருக்கா. இவரு எல்லா கடித்துக்கும் பதில் எழுதலைன்னாலும் அந்தப் பொண்ணு வசந்திக்கு தன் மனக் குமுறல்களுக்கு ஓர் வடிகாலா இருந்தது சிவாதான். மேலும் தன்னோட கதைகளில் இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் படியா எழுதறதுனால நிஜத்திலும் தனக்கொரு நல்ல முடிவை சிவாவால் தான் தர முடியும்னு வசந்தி ஆழமா நம்பியிருக்கா. அதனோட விளைவுகள்தான் சிவாவை ஆட்கொள்ள நினைச்சது!"

"இப்போ சிவாவை எப்படி குணப்படுத்தரது டாக்டர்?"

"சிம்பிள், அந்தப் பொண்ணு கொடுமைகள் செய்யப்பட்டிருக்கான்னு சொல்றதுக்கு உண்டான ஆதாரங்கள் இல்லைன்னுதான் காவல் துறை இது தற்கொலை இல்லைன்னு முடிவுக்கு வந்திருக்காங்க! சிவாகிட்டே இருக்கும் கடிதங்கள்தான் அதுக்கு ஆதாரமே. அவைகளை வெச்சி வசந்தி கணவன் மேல நடவடிக்கை எடுத்தா போதும். அந்தப் பொண்ணு சிவாவை விட்டுடும்"

"நான் சிவாகிட்டா பேசினப்போ கூட அந்த மாதிரி கடிதங்கள் பத்தி எதுவும் என்கிட்ட சொல்லலியே டாக்டர்"

"உங்கிட்ட பேசும்போது சாதாரண எழுத்தாளனா உங்க ஃபிரண்டு சிவாவா பேசியிருக்கலாம், அதனால ஒரு வாசகியோட பெர்சனல் லெட்டெர்ஸை உங்ககிட்ட இருந்து மறைச்சிருக்கலாம்,
மறுபடி பேசிப் பார்த்தால் எங்கே வெச்சிருக்கார்னு தெரியவரலாம்"


"ஓ.கே டாக்டர், சரி நான் கிளம்பரேன்." என்று எழுந்தான் சக்தி.

இதற்குப் பின்
Author: நாமக்கல் சிபி
•3/15/2006 09:49:00 am
இது வரை

கோயம்பேடு பேருந்து நிலையம். சக்தி அந்த முன் பதிவு மையத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். முன்பதிவுக் கவுண்டரில் இருந்த ஆள் நிமிர்ந்து பார்த்தார்.

"எக்ஸ்கியூஸ்மி, இங்க மிஸ்டர் ராஜமாணிக்கம்.."

"ஓ ராஜமாணிக்கமா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், இப்ப வந்துடுவார்.. அதோ வந்துட்டார் பாருங்க.." என்று கை காட்டினார்.

உள்ளே நுழைந்தவாறே "யார் என்னைப் பார்க்கவா வெயிட் பண்றீங்க? அட நீங்களா? அந்த ரிசர்வேஸன் ஸ்லிப் எடுத்து வெக்கச் சொன்னீங்களே!"

"ஆமாம் சார், எடுத்து வெச்சீங்களா?'

"அதை அடுத்த நாளே எடுத்து வெச்சிட்டேன், ரெண்டே நாள்ள வரதா சொல்லிட்டு போனீங்க, ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சி, சரி இருங்க எடுத்துகிட்டு வரேன்" என்றவாரு உள்ளே நுழைந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு

"இந்தாங்க சார் அவர் கொடுத்த ரிசர்வேஷன் ஸ்லிப்போட காப்பி"

"ரொம்ப தாங்க்ஸ் சார்" என்றவாரே இப்போது ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவர் கையில் திணித்தான் சக்தி.

அவனுக்கு வியப்பாக இருந்தது. ரிசர்வேஷன் ஸ்லிப்பில் அவன் பெயரும் , சிவா பெயரும் சரியாகவே இருந்தது. இவரும் ரிசர்வேஷன் செய்ய வந்தது சிவாதான் என்று அடித்துச் சொல்கிறார். ஆனால் இதில் இருக்கும் எழுத்துக்கள் மட்டும் சிவாவின் எழுத்துக்களுடன் ஒத்துப் போகவில்லை.

ஏதோ ஒரு ம்உடிவுக்கு வந்தவனாய் தன் செல்பேசியை எடுத்தான்.

"ஹெல்லோ டாக்டர் தேவேந்திரன்"

"யெஸ் ஸ்பீக்கிங்க்"

"நாந்தான் சக்தி பேசுகிறேன், சிவாவுடைய நண்பன்"

"சொல்லுங்க மிஸ்டர் சக்தி, நானே உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்னு இருந்தேன், நீங்களே கால் பண்ணிட்டீங்க"

"நானும் உங்களை சந்திக்கணும்னு நினைச்சேன் டாக்டர், இன்னிக்கு ஈவ்னிங்க் ஒரு 4 மணிக்கு முடியுமா முடியுமா டாக்டர்?"

"4 மணியா... ஓ.கே. நீங்க கிளினிக்குக்கு வரவேண்டாம், நேரே நான் தங்கி இருக்கற கெஸ்ட் ஹவுஸ் அடடயாறுல இருக்கு, அங்க வந்துருங்க மிஸ்டர் சக்தி"

"ஓ கே டாக்டர், ரொம்ப தேங்க்ஸ் நான் ஷார்ப்பா 4 மணிக்கு அங்க இருப்பேன்"


மாலை 4 மணிக்கு முன்னதாகவே சக்தி அவரின் இருப்பிடத்தை அடைந்தான்.

"காஃபியை எடுத்துக்குங்க சக்தி, இப்போ நான் சொல்லப் போர விஷயம் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கலாம், அல்லது அதிர்ச்சியாகவும் இருக்கலாம், நான் சொல்றதை பொறுமையா கேளுங்க, ஏதாவது சந்தேகம்னா கடைசியா நீங்க கேட்கலாம்"

"சொல்லுங்க டாக்டர்.."

"உங்க ஃபிரண்ட் சிவா, அதான் எழுத்தாளர் சிவப்பிரகாஷ் கடந்த சில நாட்களா, சில நேரங்களில் அவருடைய கட்டுப் பாட்டில் இருப்பதில்லை."

"டாக்டர் யூ மீன்..?"

"முழுசாக் கேளுங்க மிஸ்டர் சக்தி! அந்த சில நேரங்களில் அவருடைய நடவடிக்கைகள்தான் அவருக்கு சுத்தமா நினைவில் இருப்பதில்லை. அந்த நேரங்களில் அவருடைய மனசு அல்லது உள்மனசு அல்லாத ஏதோ ஒண்ணு அவரை இயக்குது"

"டாக்டர்.. தட் மீன்ஸ்..சிவாவுக்கு.....!?"

"யெஸ் யூ ஆர் கரெக்ட் மிஸ்டர் சக்தி...."

இதற்குப் பின்
Author: நாமக்கல் சிபி
•3/14/2006 10:00:00 pm
இதற்கு முன்

(வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கதாபாத்திரங்களுக்கு பெயர்சூட்டு விழா நடத்தப்பட்டது)

மாலை 6 மணி. உளவியல் மருத்துவர் Dr. தேவேந்திரனின் கிளினிக். நரைத்த தனது குறுந்தாடியைத் தடவியவாறே உற்றுப் பார்க்கிறார். மல்லாக்கச் சாய்ந்திருக்கும் நாற்காலியில் வசதியாக அமரவைக்கப் பட்டிருக்கும் எழுத்தாளர் வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார்.

சன்னமான மஞ்சள் வெளிச்சம்.

"ரிலாக்ஸா இருங்க, இப்போ நான் கொஞ்சம் கேள்விகள் கேட்கப்போறேன், நிதானமா யோசிச்சுச் சொன்னாப் போதும்..."

"சரி" என்று முனகலாக பதில் வருகிறது.

"ம்...இப்போ ஆரம்பிக்கறேன்.. உங்க பேரு என்ன?"

".........சிவப்பிரகாஷ்"

"உங்க சொந்த ஊர் எது?'

"...சென்னை"

"நீங்க என்ன தொழில் செய்யறீங்க?"

"எழுத்தாளரா இருக்கிறேன்..."

"சரி.. உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?"

"ஆகிவிட்டது"

"உங்க மனைவி பேரு என்ன?"

"என் மனைவி பேரு தாரா"

"குழந்தைகள் இருக்கா?"

"ம். இருக்கு. ஒரு பையன்."

"பேரு? என்ன வயசு"

"அஷோக், வயது ரெண்டு"

மேலும் கேள்விகள் தொடர்ந்தன.

நீளமான காரிடாரில் கவலையுடன் நின்றிருந்த சிவப்பிரககஷின் மனைவி தாரா அவனது நண்பனை ஏறிட்டாள்.

"சக்தி.. உங்க பிரண்டுக்கு ஒன்னும் ஆகாதே?"

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாய்டும்.. ஒண்ணும் கவலை படாதீங்க தாரா"

என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த அறையை விட்டு வெளியே வந்தார் Dr.தேவேந்திரன்.


அந்த குளு குளு அறையில் தேவேந்திரனுக்கு எதிரில் மூவரும் அமர்ந்திருந்தனர்.

"தாரா, நீ பயப்படுற மாதிரி உன் ஹஸ்பெண்டுக்கு ஒரு பிரச்னையும் இல்லை, ஹெ இச் ஆல்ரைட், பட்..."

"என்ன சொல்றீங்க டாக்டர்?" என்றான் சக்தி.

"மிஸ்டர் சக்தி, சில நாட்களா ஓரிரு விஷயங்கள் மட்டும் சிவாவோட மனசுல இருந்து அழிந்து விடுகிறது. அதாவது மறந்து போய்டுறாரு. ஆனா ஆழ்மனசுல அந்த நிகழ்ச்சிகளோட பதிவு இருந்துகிட்டுதான் இருக்கு. இது எல்லா விஷயத்துலயும் நடக்கறதில்லை. பயப்படவும் தேவை இல்லை. "

"தவிர இதுக்குக் காரணம் ஓயாத உழைப்பு, மெண்டல் ஸ்டிரெஸ் போன்றவை காராணங்களா இருக்கக் கூடும் கொஞ்ச நாள் எங்கியாவது வெலியூர் போய் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும்"

"தாரா.. நீ கொஞ்சம் அவரை பார்த்துக்கோ எப்பப் பாரு பேப்பரும் கையுமாவே இருப்பார்னு நினைக்கறேன், பட் யூ டோண்ட் வர்றீ! இப்போ நீங்க கிளம்பலாம், எதுக்கும் ஒன் மோர் செக் அப் தேவைப்படும்னு நினைக்கறேன்"

"அப்போ வருகிறோம் அங்கிள்"

மூவரும் தத்தமது இருக்கைகளினின்று எழுந்தனர்.

இதற்குப் பின்
Author: நாமக்கல் சிபி
•2/09/2006 09:11:00 am
இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/8.html

இனி என் நண்பனின் (எழுத்தாளரின்) மனைவி தொடர்கிறார்.

சற்று நேரம் தீவிரமாய் யோசித்த டாக்டர் கண்களைத் திறந்தார்.

"அப்போ, சமீப காலமா உன் புருஷன் உன்கிட்ட சில விஷயங்களை மறைக்கிறார்னு சொல்றே, அப்படித்தானே?"

"ஆமாம், சில விஷயங்கள் அவர் மறைப்பதாகப் பட வில்லை, அவரே மறப்பதாகவும் தோணுது"

"அப்படியா, அப்படி எதைப் பத்தியெல்லாம் அவர் மறக்கறாரு, ஏன்னா வேலை மும்மரத்துல சிலவற்றை மறந்துட வாய்ப்பு இருக்கு, இதெல்லாம் சகஜம்தான்"

"இல்லை அங்கிள், அவர் சில நேரம் ஏதாவது ஊருக்கு போயிட்டு வற்றதே அவருக்கு நினைவு இருக்கறதில்லை, இப்போ கூட சில நாட்களுக்கு முன்னாடி ஒரு ஊருக்கு போய் வந்தார், அவர் எங்க போனார், என்னிக்கு திரும்பி வந்தார்னு கூட அவருக்கு நினைவில் இல்லை."

"அப்படியா.. அப்போ அவரை ஒரு நாள் நான் பார்க்கணுமே, ஊரிலிருந்து என்னிக்கு திரும்பி வர்றார்?, தனியாகவா போயிருக்கார்?"

"இல்லை அங்கிள், அவரோட ஃபிரண்டு ஒருத்தரோட போயிருக்கார், அநேகமா இன்னும் ரெண்டு நாளில் வந்துடுவார்னு நினைக்கிறேன்"

"தட்ஸ் குட், நான் இன்னும் ஒரு வாரம் சென்னைலதான் இருப்பேன், மறுபடி வந்து பார்க்கறேன், அவர் வந்ததும் எனக்கு ஒரு கால் பண்ணும்மா, சரி இப்ப நான் கிளம்பறேன்"

"சரி அங்கிள், போய்ட்டு வாங்க, அவருக்கு ஒன்னும் பெரிசா பிரச்னை இருக்காதே"

"அதெல்லாம் ஒண்ணும் இருக்காதும்மா, நீ ஒண்னும் பயப்படாதே, நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்?"

டாக்டர் அங்கிளை அனுப்பிவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் சோர்வுடன் அமர்ந்தேன். டெலிஃபோன் ஒலித்தது.

"ஹலோ.. நாந்தான் பேசறேன், இன்னிக்கு நைட் பஸ்லயே கிளம்புறோம்.. காலையில் வந்துடுவோம்.."
என் கணவர்தான் பேசினார்.

இதற்குப் பின்
Author: நாமக்கல் சிபி
•2/08/2006 07:50:00 am
இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/7.html

மனதில் ஏகப்பட்ட குழப்பங்களைச் சுமந்தவாறு அறைக்குத் திரும்பினேன்.
"என்ன? நல்லா காத்து வாங்கி வந்தியா, சரி எனக்கு என்ன வாங்கி வந்தே.?" என்றான் என் நண்பன்.

"போகும்போது ஒண்ணுமே சொல்லியனுப்பாம என்ன வாங்கி வருவாங்கா உனக்கு?" என்றேன்.

சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. நானே ஆரம்பித்தேன்.

"அப்போ இந்த ஊருக்கு வந்து ஒரு பிரயோஜனமான விஷயமும் கிடைக்கலை. ஊருக்குப் புறப்பட வேண்டியதுதானே.."

"நான்தான் சொன்னேனே, அவசியாமா வந்துதான் ஆகனுமான்னு, சரி இன்னிக்கே டிக்கெட் கிடைக்குதான்னு பார்ப்போம்.."

"ஆமா அந்த பொண்ணு எப்படி இறந்துதாம்?" மெதுவாய் இவனிடம் கேட்டேன்.

"அதான் அவளோட புருஷன் சொன்னாரே, பிரசவம் சிக்கலாய்டுச்சின்னு...."

"இதை இப்போதான் நீ தெரிஞ்சிகிட்டயா.? இதுக்கு முன்னாடியே தெரியுமா?"

"என்ன உளற்ரே நீ? அந்த பொண்ணு செத்ததே இதுக்கு முன்னாடி வந்தப்போதான் தெரியும்"

எனக்கு ஏதோ ஒன்று கொஞ்சமாய் புரிவது போலிருந்தது.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/9.html
Author: நாமக்கல் சிபி
•2/08/2006 06:39:00 am
இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/02/6.html

சூடான காஃபியை அருந்தியவுடன் தலைவலி விட்டது போலிருந்தது. அப்படியே கடைவீதியை ஒரு சுற்று சுற்றி விட்டு அறைக்குச் செல்வதென தீர்மானித்தேன். இரண்டு மூன்று கடைகள் தள்ளி ஒரு பேன்ஸி ஸ்டோர் கண்ணில் பட்டது. ஷோ கேஸில் வைப்பது போல் ஏதாவது ஒரு பொருள் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்தேன்.

"வாங்க சார், கூட அவர் வரலியா?"
என்று வரவேற்றார் கடை முதலாளி.

ஆச்சரியம்மாக இருந்தது.
"எங்களை எப்படி தெரியும்?" என்றேன் வியப்பு மேலிட.

"நேத்துதான எங்க தெருவுல என் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு வந்து போனீங்க? அப்ப நான் வெளியில்தான் என் டூ வீலரை துடைச்சிகிட்டு இருந்தேன்.
உங்க கூட வந்தவரு கூட ஒரு எழுத்தாளர்தானே?"

"அடடே, ஒரு தடவை பார்த்ததுமே நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே?"

"அட அதான் சார் நம்ம பிசினசுக்கு உபயோகமா இருக்கு, சரி என்ன சார் நீங்க மட்டும் தனியா?"

"அது சரி, அவர் ரூம்லயே ரெஸ்ட் எடுக்கறாரு, நம்மளால ஒரு பக்கம் கொஞ்ச நேரம் சும்மா உட்கார முடியாது, அதான் அப்படியே கொஞ்சம் வாக்கிங் மாதிரி போகலாமேன்னு கிளம்பிட்டேன்"

"அவரை ரெண்டு மூனு முறை பார்த்திருக்கேன், உங்களை இப்பதான் முதல் முறையா பார்க்கறேன்"

"ரெண்டு மூனு முறை வந்திருக்காரா அவர், நான் ஏதோ இப்பதான் இரண்டாவது முறைன்னு நினைச்சேன், இதுக்கு முன்னாடி எப்போ வந்திருக்காருன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"

"இதுக்கு முன்னாடின்னா.. ஒரு ஆறு மாசம் இருக்கும் சார், அதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணு இறந்தப்போ அவரை பார்த்ததா ஞாபகம்"

வியப்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தேன். இவரிடம் பேசினால் இன்னும் நிறைய விஷயம் கிடைக்கக் கூடும்..

"பாவம் அந்த பொண்ணு பிரசவத்துலேதான இறந்தது.. சரியா கவனிச்சிக்கிலயோ?"

"பிரசவத்திலயா..? யார் சார் சொன்னது உங்ககிட்ட அப்படி? .."
சற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தவாறே குரலை தாழ்த்தினாற்போல் கேட்டார்.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/8.html
Author: நாமக்கல் சிபி
•2/07/2006 07:35:00 am
இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/01/5.html

தலையணையை முதுகிற்குக் கொடுத்தவாறு சொகுசாக கால் நீட்டி அமர்ந்திருந்த என் நண்பனை எரிச்சலாகப் பார்த்தேன்.

"என்ன இவன், பிரச்னை இவனுக்கா, எனக்கா? என்னவோ எனக்காக வந்தது போல இருக்கே!" என்று நினைத்துக் கொண்டேன்.

"ஏண்டா, தன் மனைவியைத்தவிர தன் வீட்டில வேற யாருக்கும் கதை புக் படிக்கற பழக்கமே இல்லைன்னு சொல்றாரே? பின்ன வேற யாருதான் எழுதியிருப்பான்னு நினைக்கறே?"

"என்னைக் கேட்டா, உன்னை எதுக்கு கூட்டிகிட்டு வந்தேன், அதைக் கண்டு பிடிக்கத்தான்..?

"சரி போஸ்ட் ஆஃபீஸ்ல விசாரிச்சியா?

"விசாரிச்சேனே, அந்த லெட்டர் இந்த ஊர்ல இருந்தே போஸ்ட் செய்யப்படலையாம், சென்னன முத்திரைதான் இருக்குன்னு பார்த்துட்டு சொன்னாங்க"

"ம்.. இதுக்கு பின்னாடி என்னவோ விஷயம் இருக்கு, ஒரு வேளை அந்த பெண் இறக்காமல் வேற யாரோட பாடியையோ பார்த்துட்டு அந்தப் பெண்தான்னு இவங்க நினைச்சிருக்க, அந்தப் பெண் உயிரோட சென்னையில எங்கியோ இருக்கலாம்ல"

"அப்படியே வெச்சிகிட்டாலும் அந்தப் பெண் இறந்தது பிரசவத்துலதான்னு அவளோட கணவர் சொல்றாறே, நீ சொல்ற மாதிரி பார்த்தா ஏதாவது விபத்துல அல்ல இறந்திருக்கணும்"

"இதுவும் சரிதான்..இதையே யோசிச்சிகிட்டிருந்தா எனக்கு தலைதான் வலிக்குது, அப்படியே வெளியே போய் கொஞ்சம் காத்தாட நடந்துட்டு வற்றேன்.." என்று எழுந்தேன்.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/7.html
Author: நாமக்கல் சிபி
•1/25/2006 05:00:00 am
இதற்கு முன்:

முக்கால் மணி நேரத்தில் பேருந்து தாம்பரத்தைத் தாண்டியிருந்தது. அமைதியாக ஏதொ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்த என் நண்பனிடம் திரும்பினேன். என்னைக் கூர்மையாகப் பார்த்தவன்

"என்ன பார்க்கறே? நானே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு ஏன் இப்படி நடிக்கறேன்னு கேட்க வர்றே, அப்படித்தானே?"

எழுத்தாளனாக இருந்ததில் அடுத்தவரின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை ஓரளவிற்காவது படிக்கத் தெரிந்திருக்கிறான் போலும்.

"ஆமாம்" என்பது போல் தலையசைத்தேன்.

"ஊருக்குப் போகலாம்னு சொன்னது நீ, போகனுமான்னு தயங்கினது நான்..ரெண்டு பேருமே திடீர்னுதான் முடிவு பண்ணினோம், இதிலேர்ந்தே தெரியலியா உனக்கு..? " என்றான்.

"அதுதானே.. அவன் சொல்வது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை. அப்படியிருக்க அவனே ரிசர்வ் செய்வானேன், என்னை வேறு அழைப்பானேன்.." என்று தோன்ரியத்தால் அப்படியே அமைத்யானேன்.

"ஸாரிடா.." என்றேன்.

"எதுக்கு இப்ப ஸாரி.. யாராக இருந்தாலும் அப்படித்தான் நினனப்பார்கள். விடு.ஆனா இதுல ஏதோ மர்மம் இருக்கு, அதைக் கண்டு பிடிப்போம் முதலில்" என்றான்.

"சரி, சரி." என்றேன் அமைதியாக.

"பய நல்லா தெளிவாத்தான் இருக்கான்" என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.

"டேய் நான் தெளிவாத்தான் இருக்கிறேன்." என்றான்.

"அது சரி" என்று தலையாட்டி வைத்தேன்.

பேருந்தை விட்டு இறங்கியதும் நேரே ஒரு விடுதிக்குச் சென்றோம்.

"சார், இவர் பேருக்கு எதுனா ரூம் புக் ஆகியிருக்கா....? " என்று கேட்டுவிட்டு பெயர், ஊர் எல்லாம் சொன்னேன்.

"அப்படி ஏதும் புக் ஆகவில்லை.." என்றனர்.

"கஷ்டம்.." என்று தலையிலடித்துக் கொண்டான் என் நண்பன்.

"சரி, ஒரு டபுள் ரூம் குடுங்க.."

சாவியைப் பெற்றுக் கொண்டு இரண்டாவது மாடியில் இருக்கும் எங்கல் அறையை நோக்கி நடந்தோம்.

இதற்குப் பின் :
Author: நாமக்கல் சிபி
•1/25/2006 03:36:00 am
இதற்கு முன்:

"சரி நீ போய் சீட்ல உக்காரு. நான் வாட்டர் பாட்டில் வாங்கி வர்றேன் " என்ற என் நண்பனிடம்
"சீக்கிரம் வந்துடு.." என்று கூறி அனுப்பி விட்டு என் இருக்கையில் சென்று அமர்ந்தேன்.


இனி கதையை என் நண்பன் தொடர்கிறான்....

"என்ன இது, இவனே ரிசர்வ் பண்ணிட்டு விளையாடுறானா? என்று சிந்தித்தவாறே நடத்துனரை நைசாக ஒரம் கட்டினேன்.


"சார், இவர்தான் அன்னிக்கி ரிசர்வ் பண்ண வந்தாருன்னு எப்படி இவ்வளவு க்ரெக்டா சொல்றீங்க?"


"இன்னும் உங்க குழப்பம் தீரலியா?.. அன்னிக்கு புக்கிங் கவுண்டர் பக்கத்துலதான் நானும் இருந்தேன்.

இவரு முதல்ல ஒரு டிக்கெட்தான் புக் பண்ணினாரு, அப்பக் க்ஊட அவர் முகத்தை சரியா பார்க்கலை நான்..போயிட்டு கொஞ்ச நேரத்துலயே வேக வேகமா திரும்பி வந்த அவர் என் மேலதான் இடிச்சிகிட்டார். அவர்ஹ் திரும்பி போகும்போது பின்னாடி நின்னிருந்த ரெண்டு பேரு அவரு ஏதோ ஒரு எழுத்தாளர் மாதிரி இருக்கறதா பெசிக்கிட்டாங்களே..'


"சரி, அந்த ரிசர்வேஷன் ஸ்லிப்புல எழுதியிருப்பாரில்லையா, அது எனக்கு கிடைக்குமா..?"


"என்னா சார், பஸ் கிளம்பற நேரத்துல இதெல்லாம் முடியுங்களா?"


"சரி இப்ப வேண்டாம். 2 நாள் கழிச்சி வர்றேன். அப்ப கிடைக்குமா?"


"நீங்க வேற, பழைய குப்பையெல்லாம் தேடனுமே..கிளார்க் சத்தம் போடுவார் சார்.."


"அவ்வளவுதானே.. அவரை நான் கவனிச்சிக்கறேன்..இப்ப இதை வச்சிக்கங்க..அந்த ஸ்லிப்பை மட்டும் எடுத்து வைங்க.. நான் வந்து வாங்கிக்கறேன்"

ஒரு ஐம்பது ரூபாய்த்தாளை அவர் கையில் தினித்தேன்.


"என்ன சார், ஏதாவது பிரச்னையா..? "என்று கேட்டவாறே வாங்கி தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.


"சரி சரி.. டைம் ஆச்சு..சீட்டுக்குப் போங்க.."


பஸ் புறப்பட்டது.


Author: நாமக்கல் சிபி
•1/24/2006 03:32:00 am
இதற்கு முன் :

ஏனோ அன்று இரவு முழுவதும் உறக்கம் வராது சிந்தனைகளுடனே புரண்டு கொண்டிருந்தேன். அதிகாலைக்கு மேல்தான் என்னையுமறியாமல் கண்ணயர்ந்தேன். அதற்குள் என் திருமதியின் கைவண்ணத்தால் என் உறவினர்களின் எனக்கு ஏதோ உடல் நிலை சரியில்லாததைப் போல விசாரிக்க வந்திருந்தனர். அவர்களிடம் பேசி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. மாமனார் வேறு விடவில்லை.

"மாப்பிள்ளை, ஏதாவது கோயிலுக்கு போய்ட்டு வரலாமா? ஒரு தடவை மந்திரிச்சிகிட்டா எல்லாம் சரியாப் போய்டும், மாப்பிள்ளை ஏதோ பயந்திருப்பார் போல"

"அதெல்லாம் ஒன்னுமில்லை மாமா, நீங்க கிளம்புங்க.." என்றேன்.

"என்னடா, ரெடியாகலியா நீ இன்னும்?" என்றவாறு வந்தான் என் நண்பன்.

"ஏண்டா அந்த ஊருக்கு திரும்ப போய்த்தான் ஆகணுமா என்ன?"

"போனாதான யாரு எப்ப எழுதினாங்கன்னு தெரிய வரும், ஆமா நீ என்ன பயப்படுறியா? அட்ரஸ மட்டும் குடு, நான் போய்ப்பார்க்குறேன்." என்று என் தைரியத்திற்கு வேறு சோதனை வைத்தான்.

"ச்சே, ச்சே எனக்கென்ன பயம், வேலைய விட்டுட்டு இதுக்காக அலையணுமான்னு யோசிச்சேன்"
என்று சமாளித்தவாறே புறப்பட ஆயத்தமானேன்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நானும் அவனும் நுழைந்தோம். பேருந்திற்கு அருகில் செல்லும்போதே நடத்துனர் அழைத்தார்.
"20, 21 தான உங்க சீட் நெம்பர், இன்னும் 10 நிமிஷம் கழிச்சி வந்திருந்தா அடுத்த பஸ்தான் பிடிக்கணும் நீங்க.."

"இல்லை சார், நீங்க நினைக்கற ஆள் நான் இல்லை, நான் எதுவும் ரிசர்வ் பண்ணவும் இல்லை"

"அட என்ன சார் நீங்க, போன வாரம்தான நீங்க வந்து ஒரு டிக்கெட் கேட்டீங்க, திரும்பி வந்து இன்னொரு டிக்கெட் வேணும்னு சொன்னீங்க, வேணும்னா லிஸ்ட்ல பாருங்க உங்க பேரு இருக்கான்னு"

லிஸ்டை சரி பார்த்த என் நண்பன் "என்னடா உன் பேரு தெளிவா அதுல இருக்கு, நீயே ரிசர்வ் பண்ணிட்டு மறந்துட்டியா?" என்றான். அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

"நல்ல ஆளுங்க சார் நீங்க! சரி சரி ஏறி சீட்ல உக்காருங்க, டிக்கெட் உள்ளே வந்து தர்றேன்"
என்றவாறு நகர்ந்தார்.

இதற்குப் பின்:
Author: நாமக்கல் சிபி
•1/24/2006 01:20:00 am
இதற்கு முன் :

நாக்கு உலர்ந்து போய் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள நெற்றியில் ஆறாய் ஓடும் வியிர்வையினூடே நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தேன். என் மனைவி என்னவோ, ஏதோ என்று பயந்து விட்டாள். உடனடியாக ஓடிச்சென்று சாமி படத்திற்கருகிலிருந்த விபூதியைக் கொஞ்சம் எடுத்து வந்து என் நெற்றியில் பூசி விட்டாள். சிறிது நேரம் கழித்துத்தான் எனக்கு சுய உணர்வே திரும்பியது.
உடனே என் நண்பனை செல்பேசியில் அழைத்தேன்.

"டேய், கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?, முக்கியமான விஷயம்"
"இந்நேரத்திலா, மணி இப்போ நைட் 10.30 ஆகுது, என்ன விஷயம் சொல்லு, ஏதாவது பிரச்னையா?"
"உடனே கிளம்பி வாயேன், நேர்லயே சொல்றேன்"
"சரி இன்னும் அரை மணியில அங்க இருப்பேன்"
தொடர்பை துண்டித்தான்.

காலி தேனீர் கோப்பையை டீபாயின் மீது வைத்தவாறே என்னை ஏறிட்டான்.
"அந்த கடைசியா வந்த கடிதங்கள் அந்த பெண்தான் எழுதியிருக்க வேண்டுமா என்ன? வேறு யாராவதோ கூட எழுதியிருக்கலாம் அல்லவா?"

"அப்படியே பார்த்தாலும் கூட இன்னிக்கு வந்த கடிதத்தை வேறு யாரும் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை, ஏன்னா இன்னும் அந்த நாவலை பிரசுரத்துக்கே நான் இன்னும் கொடுக்கலை"

"நீ இபோ எழுதிகிட்டிருந்த இந்த நாவலை பத்தி யார்கிட்டயாவது பேசியிருக்கியா? வெறும் தலைப்பே மட்டுமே வெச்சி விளையாட்டுக்காக இப்படி பண்ணலாமே?"

"இல்லியே, அந்த நாவலில் வற்ற கேரக்டர்களை பத்தி கூட தெளிவா விமர்சனம் பண்ணப்பட்டிருக்கு அந்த கடிததுல"

"அப்படியா....." என்றவாறே அழ்ந்த யோசனியில் இறங்கினான் என் நண்பன்.

இதற்குப் பின் :
Author: நாமக்கல் சிபி
•1/23/2006 07:00:00 am
வாராந்திரப் பத்திரிக்கையொன்றின் தொடர்கதைக்கு நாலாவது அத்தியாயத்தை முடித்து நிமிர்ந்தபோது மணி இரவு 12.30 ஐத் தாண்டியிருந்தது. இருப்பினும் தூக்கம் வரவில்லை. படுக்கையறையில் சிணுங்கிய என் இரண்டு வயது மகனை தூக்கக் கலக்கத்துடனேயே தட்டி விட்டுக் கொண்டிருந்தாள் என் மனைவி.

மேசை மீதிருந்த வாசகர் கடிதங்களை எடுத்து பதில் எழுத ஆரம்பித்தேன். கடிதங்களுக்கு மத்தியில் ஓர் கல்யாணப் பத்திரிகையும் இருந்தது. பிரித்துப் பார்த்தேன். என் நண்பன் ஒருவனின் தங்கைக்கு திருமணம். நடைபெறும் ஊரின் பெயர் சற்று பரிச்சயமானதாக இருந்தது. சற்று யோசித்துப் பார்த்ததில் அதே ஊரில் இருந்து எனக்கு தொடர்ந்து ஒரு வாசகியின் கடிதங்கள் வருவது எனக்கு நினைவுக்கு வந்தது. சரி இந்த திருமணத்திற்கு சென்று விட்டு அப்படியே அந்த வாசகியையும் சந்தித்து வரலாம் என்று முடிவு செய்தேன். இதன் மூலம் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊர் வாசகர்களை வலிய சென்று சந்திப்பது என் வழக்கம்.


முகூர்த்தம் முடிந்த கையோடு சிற்றுண்டி முடிந்தவுடன் நண்பனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். அந்த வாசகியின் முகவரியை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை. தெரு முனையில் அந்த பெண்ணின் பெயரை சொல்லி விசாரித்தபோது ஏற இரங்க பார்த்தது ஏன் என்று மட்டும் புரியவில்லை. அந்த பெண்ணின் கணவர்தான் என்னை வரவேற்றார். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவர் முகம் சற்று கவலையடைந்ததையும் கவனித்தேன்.
"உங்க கதைகள்னா அவளுக்கு ரொம்ப உசிரு சார், உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவா, ஆனா பாருங்க நீங்க வந்த நேரம், அவ இப்ப உசிரோடயே இல்லை"
அதிர்ச்சியில் சற்று நேரம் அமைதியாய் இருந்தேன்.
"குழந்தைங்க.."
"இல்லை சார், போன வருஷம்தான் பிரசவம் சிக்கலாகி அம்மா குழந்தை ரெண்டு பேருமே...."
அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தன் மனைவி எழுதும் வாசகர் கடிதங்களின் பிரதிகளையெல்லாம் எடுத்து வந்து காண்பித்தார். அதே அழகழகான கையெழுத்து. நெஞ்சு கனத்தது எனக்கு. சற்று நேர மௌனத்திற்குப் பின் ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டேன். தெரு முனை வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த பின்னும் கூட நெஞ்சு கனமாகவே இருந்தது. என் மனைவி கேட்டாள். "என்னங்க உடம்பு ஏதும் சரியில்லையா? ". "ஒன்றுமில்லை" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறினேன்.

ஏதொ ஒன்று மட்டும் என் உள்ளத்திற்குள் நெருடியது. கடைசியாக வந்த கடிதங்களின் பிரதி அவள் கணவனிடம் இல்லாததன் காரணம் என்ன? என்னுடைய ஃபைலை எடுத்து புரட்டினேன்.
நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பு அதிகமாகித்தான்போனது. கடிதங்கள் எழுதப்பட்ட தேதிகளைப் பார்த்தால், அவள் இறந்த தேதிக்குப் பிறகு எழுதப்பட்டவைகள்..................


"என்னங்க, உங்க ஃபேவரைட் ரசிகைகிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு, மேசை மேல வச்சிருந்தேன் பார்க்கலியா?" என்றால் என் மனைவி. பிரித்திப் பார்த்தேன். அடுத்த வாரம் பிரசுரத்திற்கு அனுப்ப இரண்டு தினங்களுக்கு முன்பே எழுதி முடித்த என் "நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்" என்ற நாவலை படித்ததாகவும், வெகுவாகப் பாரட்டியும் எழுதியிருந்தாள் அந்த அமானுஷ்ய வாசகி.

இதற்குப் பின் ;

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!