Author: நாமக்கல் சிபி
•9/10/2006 03:56:00 am
முதல் பகுதி

ஒரு வாரத்தில் ஜூரம் விட்டிருந்தது. மீண்டும் எனது வேலையைக் கவனிக்கத் துவங்கினேன். அந்த வாரம் முழுக்க அந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படவில்லை. அதற்கு அடுத்த வாரம்தான் சென்றேன்.

வழக்கம்போல் மாணிக்கம் டீக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டேன்.

"ஏம்பா, விஷயம் தெரியுமா..." என்றார் மாணிக்கம். கேள்விக்குறியுடன் நிமிர்ந்து பார்த்தேன்.

"ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த ஒத்தைப் புளிய மரத்துப் பக்கம் ராத்திரி நேரத்துல போன ஒரு ஆளை அந்த சின்னத் தாயோட ஆவி அடிச்சிடுச்சு.."

"அப்படியா..? யாரு அந்த ஆளு..?" என்றேன்.

"அதாம்பா... நம்ப கள்ளுக்கடை சோமு இருக்கான்ல அவனோட தம்பி...நல்லா மப்புல அந்த பக்கம் போயிருப்பான் போல.. போட்டுத் தள்ளிடுச்சு...மரத்துக்கு கீழயே அவனோட பொணம்..பொடனியில அடிச்சிருக்கும் போல... அவனுக்கும் கொஞ்சம் கொழுப்புதான் செல்வராசு..போன மாசம் அவனோட கூட்டாளிப் பசங்ககிட்ட ராத்திரி 12 மணிக்கு தைரியமா ஒத்தைப் புளிய மரத்துல போயி கயிறு கட்டிட்டு வர்றேன்னு இங்க உக்காந்துதான் பந்தயம் கட்டிகிட்டிருந்தான், அதிலயெல்லாம் விளையாட்டு வேணாம்பான்னு நான் கூட சொன்னேன்..
சொன்னா யாரு கேக்குறாங்க.." என்று அலுத்துக் கொண்டான்.

கடையிலிருந்து கிளம்பினேன். எதிரில் பாத்திரக் கடை சுந்தரம் வந்து கொண்டிருந்தார். மாட்டுவண்டியில் அவரது வீட்டு சாமான்கள், மற்றும் கடை சாமான்கள். வீடு மாற்றிப் போகிறார் போல. என்னைப் பார்த்ததும் நின்றார்.

"'என்ன செல்வராசு ரெண்டு வாரமா.. இந்தப் பக்கம் பார்க்க முடியலை?"

"கொஞ்சம் உடம்பு சரி இல்லை..அதான்..என்ன திடீர்னு பாத்திரம் பண்டமெலாம்?"

"ஆமாப்பா, எங்க சொந்த ஊருக்கே போறேன், வியாபாரம் சரி இல்லை.. எங்க ஊருக்கே போய்டா பங்காளி, மாமன், மச்சான் எல்லாரும் இருக்காங்க, அவங்க கூட சேர்ந்து எதுனா பிழைப்பை ஓட்டிக்க வேண்டியதுதான்...சரி செல்வராசு நான் வர்றேன்.."

வண்டியும் நகர ஆரம்பித்தது. வண்டியின் பின்புறம் சுந்தரத்தின் மனைவியும் மகளும் அமர்ந்திருந்தனர். அவர் மகளைப் பார்த்தேன். அவளும் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் நன்றி தெரிந்தது. வருகிறேன் என்று சொல்வது போல் தலையசைத்தாள்.
நானும் சிறியதொரு புன்னகையுடன் தலையசைத்தேன்.

"தன்னைக் காப்பாத்திக்க முடியாமதான் அந்த சின்னத் தாயி செத்துப் போனா.. இப்போ உன்னைக் காப்பாத்துறதுக்காக கொலைப் பழியவும் அவளே ஏத்துகிட்டா.." என்று நினைத்துக் கொண்டேன்.
Post a Comment
This entry was posted on 9/10/2006 03:56:00 am and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 விமர்சனங்கள்:

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!