Author: நாமக்கல் சிபி
•7/12/2008 10:34:00 am
கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சென்றவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்! எனது கைகளில் நானவளுக்கெழுதிய கடிதங்களும் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும்!

ஒன்றும் செய்யத் தோன்றாது விரக்தியுற்ற நிலையில் அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்! பேரர் வந்து அருகில் நின்று "க்கும்" என்று சன்னமாய்க் கணைத்து தன் இருப்பை உணர்த்தினான். நூறு ரூபாய்த் தாளொன்றை அவன் கையில் திணித்துவிட்டு மீதம் வாங்கவேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் மேசையினின்று எழுந்தேன்!

வெறும் காகிதங்களாகிப் போன கடிதங்களை இனி என்ன செய்வது? மொத்தமாய்க் கிழித்து ஓரமாய் இருத்த குப்பைக் கூடையில் சேர்த்தேன்!
16 தளங்கள் கீழிறங்கிச் செல்லவேண்டும்! லிஃப்ட்டினுள் நுழைந்து கதவைச் சாத்தினேன்! அரை நொடிப் பொழுது இடைவெளியில் இன்னொருவனும் உள்ளே நுழைந்து கொண்டான்! லிஃப்டினுள் நாங்கள் இருவர் மட்டுமே!

மௌனமாய் இருந்த என்னைப் பார்த்து சிரித்தான்! அப்போதுதான் கவனித்தேன்! அவன் தனது தலையை வழுவழுவென்று மொட்டையடித்திருந்தான்! நீல ஜீன்சும் கருப்பு டிஷர்ட்டும் அணிந்திருந்தான்!

அவனே பேசத் தொடங்கினான்.

"இனிமே என்னை மறந்துடுன்னு சொல்லி இருப்பாளே! நமக்கு சேர்ந்து வாழக் கொடுப்பினை இல்லை! இனிமே நீ யாரோ நான் யாரோன்னும் சொல்லி இருப்பாளே! என் அப்பாவும் அம்மாவும் தூக்குல தொங்குறதை என்னால நினைச்சிக் கூடப் பார்க்க முடியலைன்னும் சொல்லி இருப்பா!"

மௌனமாய் அவனை ஆமோதித்தேன்!

"கொன்னுடு! அவளைக் கொன்னுடு!" என்றான்.

திடுக்கிட்டு நிமிர்ந்தேன்!

இப்போது நெருங்கி வந்து தோள்களைத் தொட்டான்!
"நண்பா! இந்த மாதிரி காதலிச்சிட்டு கடைசில கழுத்தறுத்துட்டுப் போறவளுக எல்லாம் இந்த உலகத்துல இருக்கணுமா என்ன? இந்தா துப்பாக்கி! சுட்டுக் கொன்னுடு" என்று தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை எடுத்துக் கொடுதுவிட்டு விகாரமாய் இளித்தான்!

"ட்டுமீல்.. ட்டுமீல்.." லிஃப்டின் சுவர்களில் துப்பாக்கி வெடித்த சத்தம் எதிரொலித்தது!

"ஏண்டா இப்படி அலையுறீங்க! ஏதோ சில காரணங்களால சேர்ந்து வாழ முடியலைன்னு சொல்லி அழுதுட்டுப் போறா! நம்மால முடியலைன்னாலும் அவங்களாவது எங்கியாவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமேன்னு இல்லாம ஏண்டா பழி வாங்கணும்னு நினைக்கிறீங்க!" என்று கத்திவிட்டு துப்பாக்கியை அவன் மீதே எறிந்துவிட்டு விஃப்டை விட்டு வெளியேறி வாசலை அடைந்தேன்.

கைகாட்டி அழைக்கவும் அருகில் வந்து நின்ற டாஸி டிரைவரிடம்

"போலீஸ் ஸ்டேஷன் போப்பா" என்று கூறிவிட்டு ஏறி அமர்ந்தேன்!
Post a Comment
This entry was posted on 7/12/2008 10:34:00 am and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 விமர்சனங்கள்:

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!